நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் எழுந்துள்ள தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள ராஜினாமா கடிதத்தில், “எனது இளம் நண்பர்களே, கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விச் சீர்திருத்தப் பணிகளுக்காக என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளேன். வலுவான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தொலைநோக்கு பார்வையைக் கொண்ட கல்வி முறைதான் ஒரு பலமான நாட்டின் மூலக்கல் என்று நான் எப்போதும் நம்புகிறேன்.
நாட்டின் இளைஞர்களின் எதிர்பார்ப்புகள், உணர்வுகள் மற்றும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நான் எப்போதுமே மதிப்பளித்து வருகிறேன். இந்தியாவின் இளைய தலைமுறையின் கனவுகளை நனவாக்குவது எங்கள் அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையின் தார்மீக உறுதிப்பாடாகும். நாட்டின் பிரதமரின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் நாட்டுக்குச் சேவையாற்ற வாய்ப்பளித்தமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனினும், கடந்த மே 3, 2026 அன்று நடைபெற்ற நீட் தேர்வு தொடர்பாக சில முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்தன. இதுகுறித்து உடனடியாகக் கவனம் செலுத்திய மத்திய அரசு, விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைத்ததுடன், தேர்வையும் ரத்து செய்து மறுதேர்வுக்கான தேதியையும் அறிவித்தது. மேலும், அடுத்த ஆண்டு முதல் இத்தேர்வை கணினி வழித் தேர்வு முறையில் நடத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டது.
இந்தக் காலம் முழுவதும், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான தேர்வை தடையின்றி நடத்துவதே எங்களின் முதன்மையான முன்னுரிமையாக இருந்தது. மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் குறிப்பாக மாவட்ட நிர்வாகங்களை உள்ளடக்கிய ‘ஒட்டுமொத்த அரசு’ அணுகுமுறை மூலம் இது சாத்தியமானது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் தேர்வு கடந்த ஜூன் 21, 2026 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.
முதல் நாளிலிருந்தே நான் முழுப் பொறுப்பேற்றுக் கொண்டேன்; எப்போதுமே இச்சூழலில் இருந்து பின்வாங்கியது கிடையாது. ‘தேர்வு மாஃபியாக்களால்’ எந்தவொரு தகுதியான மாணவனின் திறமையும் வீணடிக்கப்படக்கூடாது என்பதிலும், எந்த மாணவனுக்கும் நீதி மறுக்கப்படக்கூடாது என்பதிலும் நான் உறுதியாக இருந்தேன்.
கடந்த ஜூலை 16 அன்று வெளியிடப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் திருப்திகரமாக இருந்தன; பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த பல திறமையான மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
இருப்பினும், இந்தக்காலகட்டத்தில்கூட பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் சில தடைகளை ஏற்படுத்தி மாணவர்களைத் திசைதிருப்ப முயன்றனர் – இது எனக்கு ஆழ்ந்த வேதனையை அளித்தது.
நமது ஜனநாயகத்தின் பலத்தின் மீது நான் எப்போதும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளேன். இளைஞர்களின் லட்சியங்கள், கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை ஆழமாக மதிக்கிறேன். அவர்கள் இந்தியாவின் எதிர்காலம் மட்டுமல்ல; புதிய மற்றும் வளர்ந்த இந்தியாவின் பந்தந்தாங்கிகள், படைப்பாளிகள் மற்றும் சிற்பிகள் ஆவர். கடந்த பத்து நாட்களாக நடந்த நிகழ்வுகள் எனக்கு வலியை ஏற்படுத்தியுள்ளன. இது எனக்கு தனிப்பட்ட அந்தஸ்து அல்லது பெருமை சார்ந்த பிரச்சனை அல்ல.
நாட்டின் இளைஞர்களைக் குழப்ப வலையில் சிக்க அனுமதிக்க மாட்டேன் என்பதே எனது உறுதியாகும். ஜந்தர் மந்தர் மற்றும் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், தேசவிரோத சக்திகள் இதைப் பயன்படுத்திவிடாமல் தடுப்பதற்காகவும், தேசிய ஒற்றுமையைப் பாதுகாக்கவும், எந்தவொரு இந்திய மாணவனின் எதிர்காலமும் சட்டச் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யவும், நமது குழந்தைகள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்தி தங்களது எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள அனுமதிக்கவும் எனது ராஜினாமா கடிதத்தை மாண்புமிகு பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளேன்.
மதிப்பிற்குரிய பிரதமரின் வழிகாட்டுதல், நம்பிக்கை மற்றும் நிலையான ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சரவையில் உள்ள எனது மதிப்பிற்குரிய சக அமைச்சர்கள், அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், மற்றும் நான் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். நாட்டுக்குச் சேவையாற்றுவதே எனது வாழ்வின் மிக உயர்ந்த முன்னுரிமையாகும்; இதற்காக நான் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பேன்.
ஜகன்னாதப் பெருமானின் ஆசியுடன், பாரத மாதாவின் லட்சியங்கள், ஒடிசா மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் நாட்டின் இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக எதிர்காலத்திலும் எனது வழியில் தொடர்ந்து என்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
