சர்வதேச எரிசக்தி சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று பெரும் ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. அமெரிக்கா மீண்டும் ஈரானின் மீது தடைகளை விதித்துள்ளதும், ஹார்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் மூடியுள்ளதும் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 9.6 சதவீதம் உயர்ந்து, ஒரு பேரல் 83.30 டாலராக அதிகரித்துள்ளது. இது 2020 மே மாதத்திற்குப் பிறகு காணப்பட்ட மிக அதிகபட்ச ஒருநாள் உயர்வு ஆகும். அதேபோல், டபிள்யூ.டி.ஐ (WTI) கச்சா எண்ணெய் விலையும் 9.4 சதவீதம் அதிகரித்து 78.14 டாலராக நிலைபெற்றுள்ளது.

XS.com நிறுவனத்தின் சந்தை ஆய்வாளர் ரானியா குலே கூறுகையில், “இது வெறும் தற்காலிக விலை உயர்வு மட்டுமல்ல, எரிசக்தி சந்தையில் நிலவும் புவிசார் அரசியல் அபாயங்களை முதலீட்டாளர்கள் மீண்டும் கணக்கிடத் தொடங்கியுள்ளனர். போர்ச் சூழல் மற்றும் எண்ணெய் விநியோகத் தடைகள் குறித்த அச்சம் காரணமாகவே சந்தை இவ்வாறு எதிர்வினையாற்றியுள்ளது.

தூதரக ரீதியிலான எந்தவொரு முன்னேற்றமும் எட்டப்படாத வரையில், இந்த விலை உயர்வு நீடிக்கும்” என்று எச்சரித்துள்ளார். இந்த அதிரடி விலை உயர்வால், கச்சா எண்ணெயை பெருமளவில் இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாடுகளில், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version