சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள லியுயாங் பகுதியில் இயங்கி வந்த முன்னணி பட்டாசு தொழிற்சாலையில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர வெடிவிபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு உற்பத்தியின் தலைநகராகக் கருதப்படும் இப்பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில், பணியில் இருந்த 21 தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பட்டாசுகள் வெடித்து சிதறியதில் தொழிற்சாலைக் கட்டடங்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமான நிலையில், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து போர்க்களம் போலக் காட்சியளித்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 61 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

விபத்து நிகழ்ந்த இடத்தைச் சுற்றியுள்ள 3 கிலோமீட்டர் பரப்பளவில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். சீனாவில் விற்பனையாகும் பட்டாசுகளில் சுமார் 60 சதவீதம் இப்பகுதியிலேயே உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், பாதுகாப்பு விதிமுறைகளில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து சீன அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version