அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ஏமனின் ஹவுதி கிளர்ச்சிப்படை செங்கடலில் சவுதி அரேபியாவின் எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்ததைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் மூண்டுள்ளது. செங்கடலின் பெரும்பாலான பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து சவுதி அரேபியாவிற்குச் சொந்தமான 2 எண்ணெய்க் கப்பல்கள் மீது ஜூலை 23ல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஹார்முஸ் நீரிணையைக் கைப்பற்றும் நோக்கில் அமெரிக்கப் படைகள் தொடர்ந்து 12 நாட்களாக ஈரானிய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. செங்கடல் பகுதியில் சவுதி கப்பல்கள் மீதான தாக்குதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகள் கடுமையாக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹவுதிகள் நேரடியாகப் போரில் களமிறங்கியுள்ளதால், அமெரிக்காவிற்கு ஆதரவாக இஸ்ரேலிய படைகளும் மீண்டும் களத்தில் இறங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள முக்கியக் கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், ஹவுதிகளின் இந்த நடவடிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version