மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே வெடித்துள்ள போர், தற்போது உலக நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. நேற்று (மார்ச் 18) ஈரானின் மிகப்பெரிய எரிவாயு வயலான தெற்கு பார்ஸ் (South Pars) மற்றும் அசலுயே (Asaluyeh) சுத்திகரிப்பு மையத்தின் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியது. இதற்குப் பதிலடியாக, கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் எரிசக்தி மையங்களை தாக்கப்போவதாக ஈரான் பகிரங்கமாக எச்சரித்தது. அதன்படி, கத்தாரின் முக்கியமான ராஸ் லஃப்பான் (Ras Laffan) தொழில்துறை பகுதி மற்றும் சவுதி அரேபியாவின் எரிவாயு மையங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலால் உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதியாளரான கத்தார் எனர்ஜி (QatarEnergy) நிறுவனம் தனது உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதுடன், ‘ஃபோர்ஸ் மஜூர்’ (Force Majeure) எனப்படும் தவிர்க்க முடியாத சூழலை அறிவித்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த எல்.என்.ஜி (LNG) இறக்குமதியில் சுமார் 40% முதல் 45% வரை கத்தாரையே நம்பியுள்ளது. தற்போது கத்தாரில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாலும், ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீர்ச்சந்தி  வழியாக சரக்கு கப்பல்கள் செல்வது தடைபட்டுள்ளதாலும், இந்தியாவிற்கான எரிவாயு விநியோகம் கடுமையாகச் சிக்கலுக்குள்ளாகியுள்ளது.

இந்தியாவின் பெட்ரோநெட் எல்.என்.ஜி (Petronet LNG), கெயில் (GAIL) மற்றும் ஐஓசிஎல் (IOCL) போன்ற நிறுவனங்கள் கத்தாரிடம் இருந்து எரிவாயுவைப் பெறுவதில் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளன. இதன் விளைவாக, சர்வதேச சந்தையில் எரிவாயு விலை ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது ($10/MMBtu லிருந்து $25/MMBtu வரை). இது இந்தியாவில் உர உற்பத்தி, மின்சாரம் மற்றும் நகர எரிவாயு (City Gas Distribution) விநியோகத்தைப் பாதிப்பதோடு, சமையல் எரிவாயு மற்றும் சிஎன்ஜி விலையையும் உயர்த்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version