அமெரிக்க மண்ணில் பிரசவம் பார்த்து குடியுரிமை பெற விரும்பும் எந்தவொரு விண்ணப்பதாரருக்கும் சுற்றுலா விசா வழங்கப்படாது என்று இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்காவில் பிரசவம் பார்ப்பதற்காக சுற்றுலா விசா பெறுபவர்கள் இப்போது கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். இதுபோன்ற முயற்சிகள் அமெரிக்க விசா முறையை தவறாகப் பயன்படுத்துவதாகக் கருதப்படும் என்றும், விண்ணப்பம் முற்றிலும் நிராகரிக்கப்படும் என்றும் தூதரகம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க தூதரகம் தனது எக்ஸ் பதிவில், அமெரிக்காவுக்குப் பயணம் செய்வதன் முதன்மை நோக்கம் குழந்தையைப் பெற்றெடுத்து, அக்குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெறுவது என்றால், அத்தகைய கர்ப்பிணிப் பெண்களுக்குத் தூதரக அதிகாரிகள் விசா வழங்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, “பயணத்தின் முதன்மை நோக்கம் அமெரிக்காவில் குழந்தையைப் பெற்றெடுத்து, அக்குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெறுவது என்று அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் நம்பினால், அவர்கள் சுற்றுலா விசா விண்ணப்பங்களை நிராகரிப்பார்கள். இது அனுமதிக்கப்படாது என்று தெளிவுப்படுத்தியுள்ளது.
அமெரிக்க செனட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் அரசாங்க விவகாரங்களுக்கான குழுவின் 2022 அறிக்கையின்படி, அமெரிக்க வெளியுறவு துறை, அமெரிக்காவில் குழந்தை பெற்றுக்கொள்ள வருபவர்களை பிற மருத்துவ சிகிச்சைக்காக வருபவர்களைப் போலவே அணுக வேண்டுமெனத் தன் தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அதன்பிறகே, பிறப்புச் சுற்றுலா நடைமுறை அதிகரித்துள்ளது.
ஒரு மதிப்பீட்டின் படி, அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 33,000 குழந்தைகள் பிறப்பு சுற்றுலா (birth tourism) மூலம் பிறக்கின்றனர். மேலும், சரியான அனுமதி இல்லாமல் அமெரிக்காவில் வசித்து வரும் வெளிநாட்டவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் லட்சங்களில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க நகரங்களில் பிரசவ சுற்றுலா மூலம் குடியுரிமை பெற மக்களுக்கு உதவுவதற்காக பல நிறுவனங்கள் தோன்றின. கலிபோர்னியா மற்றும் புளோரிடாவில் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) நடத்திய வழக்கு விசாரணைகளில், இந்த முகவர்கள் மருத்துவமனை முன்பணங்கள் மற்றும் ஆடம்பர தங்குமிடங்கள் உள்ளிட்ட ‘தொகுப்புச் சலுகைகளுக்காக’ 80,000 டாலர் வரை கட்டணம் வசூலித்தது தெரியவந்தது.
அமெரிக்க வெளியுறவுத் துறை, பி வகை விசா அல்லது வருகை விசாவுக்கான தனது விதிமுறையைத் திருத்தியது. ஜனவரி 24, 2020 முதல் நடைமுறைக்கு வந்த இந்தத் திருத்தத்தின்படி, ஒரு நபர் தனது குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமை பெறுவதற்காகவே அமெரிக்காவில் பிரசவிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு பயணம் செய்தால், அவருக்கு விசாவை மறுக்க அதன் தூதரக அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தூதரக அதிகாரிகள் கர்ப்பிணிப் பெண்ணுக்கு விசா வழங்கினாலும், பயணத்தின் நோக்கம் ‘பிரசவ சுற்றுலா’ என்று அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்தால், அவர்கள் நுழைவை மறுக்கலாம்.
அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையின் இணையதளத்தின்படி, “கர்ப்பிணி வெளிநாட்டினர் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுக்கும் குறிப்பிட்ட விதிமுறைகள் எதுவும் இல்லை என்றாலும், நுழைவை அனுமதிப்பதும் மறுப்பதும், அனுமதி வழங்கும் அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரியின் விருப்பத்திற்கு உட்பட்டது.”
“நீங்கள் அரசாங்கத்தின் பராமரிப்பில் இருக்க நேரிடும் என்று சிபிபி அதிகாரி தீர்மானித்தால் (அதாவது, உங்களிடம் மருத்துவக் காப்பீடு இல்லாததால் அரசாங்கம் மருத்துவ வசதி வழங்க வேண்டியிருந்தால்), உங்களுக்கு நுழைவு மறுக்கப்படலாம்,” என்று அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.
