வெனிசுலாவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கையின்போது 32 கியூப இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கியூப அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4, 2026) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வெனிசுலாவில் அமெரிக்கத் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து கியூபாவால் வெளியிடப்பட்ட முதல் அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும். கொல்லப்பட்ட அனைத்து கியூப இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகளும் வெனிசுலா அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் அங்கு பணியமர்த்தப்பட்டு, ஒரு சிறப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்று கியூப அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்தது. இருப்பினும், அந்த அதிகாரிகள் வெனிசுலாவில் என்ன பணிகளைச் செய்து கொண்டிருந்தார்கள் என்பதை கியூப அரசாங்கம் குறிப்பிடவில்லை.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்த நடவடிக்கை குறித்துக் குறிப்பிட்டார். ஞாயிற்றுக்கிழமை இரவு (ஜனவரி 4) புளோரிடாவிலிருந்து வாஷிங்டனுக்கு ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் திரும்பிக்கொண்டிருந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “உங்களுக்குத் தெரியும், நேற்று நிறைய கியூபர்கள் இறந்தனர். எதிர்த் தரப்பில் நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டன. எங்கள் தரப்பில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை,” என்று கூறினார். வெனிசுலாவில் அமெரிக்க வான்வழித் தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா சனிக்கிழமை (ஜனவரி 3, 2026) அன்று வெனிசுலாவில் இந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் போது, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். போதைப்பொருள் பயங்கரவாதத்திலும், போதைப்பொருள் பயங்கரவாத சதியிலும் ஈடுபட்டதாக அவர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கத் தாக்குதல்களில் சிலர் உயிரிழந்ததை வெனிசுலா அரசாங்கம் ஒப்புக்கொண்டது.
படுகொலை செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, கியூப அரசாங்கம் இரண்டு நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளது. கியூபாவின் முன்னாள் அதிபரும் புரட்சிகரத் தலைவருமான ரவுல் காஸ்ட்ரோவும், தற்போதைய அதிபர் மிகுவல் டயஸ்-கனலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த அதிகாரிகளின் பெயர்களும் பதவிகளும் இதுவரை வெளியிடப்படவில்லை.
