மத்திய கிழக்கின் மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா நடத்தியுள்ள அதிரடித் தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் சர்வதேச எண்ணெய் போக்குவரத்து கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தங்களுக்கு ராணுவ ரீதியாக உதவுமாறு நேட்டோ (NATO) உறுப்பு நாடுகளிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், நேட்டோ நாடுகள் இந்தப் போரில் நேரடியாகப் பங்கெடுக்கத் தயக்கம் காட்டி முன்வராத நிலையில், அமெரிக்கா தனித்துச் செயல்பட்டு இந்தத் தாக்குதலை அரங்கேற்றியுள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் அமைந்துள்ள ஈரானிய ஏவுகணை தளங்கள் மற்றும் ராணுவக் கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்க விமானப்படை இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. சுமார் 2,200 கிலோ எடையுள்ள அதிநவீன ‘பதுங்குகுழி தகர்ப்பு’  குண்டுகளைப் பயன்படுத்தி அமெரிக்க ராணுவம் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஈரானின் ஏவுகணைகளை அழிப்பதே இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையால் பாரசீக வளைகுடா பகுதியில் பெரும் போர் பதற்றம் உருவாகியுள்ளது.

ஈரான் இதற்குப் பதிலடி கொடுக்கக்கூடும் என்பதால், ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது, இது உலகப் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version