ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தபடி, ஈரானின் பர்தாவ் (Fordow), நடான்ஸ் (Natanz) மற்றும் எஸ்பஹான் (Esfahan) ஆகிய மூன்று முக்கிய அணு உலைகள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்கள் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

 

அமெரிக்காவின் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்திய அதிபர் டிரம்ப், இது ஈரானின் அணு ஆயுதத் திறனை அழிப்பதற்கான ஒரு வெற்றிகரமான நடவடிக்கை என்று தெரிவித்தார். “ஈரானின் முக்கிய அணு செறிவூட்டும் வசதிகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன,” என்றும் அவர் குறிப்பிட்டார். இரண்டு B-2 பாம்பர் விமானங்கள் (stealth bombers) மற்றும் Tomahawk ஏவுகணைகள் இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாகவும், குறிப்பாக ஃபோர்டோ அணு ஆலையில் “பங்கர்-பஸ்டர்” குண்டுகள் வீசப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குப் பாராட்டுத் தெரிவித்தார். “உலகில் வேறு எந்த நாடும் செய்ய முடியாததை அமெரிக்கா செய்துள்ளது. ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் வரலாற்றை மாற்றி அமைக்கப் போகிறது,” என்று அவர் கூறினார். மேலும், இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே முழுமையான ஒருங்கிணைப்புடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் நெதன்யாகு குறிப்பிட்டார்.

 

அதே சமயம், அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் ஈரானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தலைவர் அயோத்துல்லா அலி காமேனி, “அமெரிக்காவுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பேரழிவு காத்திருக்கிறது. அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடித்து வைப்போம்” என்று எச்சரிக்கை விடுத்தார். இந்தத் தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறிய செயல் என்றும், ஈரானின் அணுசக்தித் திட்டத்தை நிறுத்த முடியாது என்றும் ஈரான் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

 

ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்க நகரங்களான நியூயார்க், வாஷிங்டன், கொலம்பியா, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட மாகாணங்களில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தூதரக மையங்களில் பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது பிராந்தியத்தில் மேலும் ஒரு பெரிய போர் ஏற்படுமோ என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளதுடன், அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தான செயல் என்றும் எச்சரித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version