அமெரிக்கக் கட்டுப்பாட்டில் உள்ள விதிகளின் கீழ், இந்தியா வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்க அனுமதிக்கத் தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியுள்ளதாக டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது அமெரிக்கத் தடைகளால் முடங்கியிருந்த வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐஏஎன்எஸ் அறிக்கையின்படி, வெனிசுலாவின் அதிகரித்து வரும் எரிசக்தித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இந்தியா வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை மீண்டும் தொடங்க அமெரிக்கா அனுமதிக்கத் தயாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு “ஆம்,” என்று அந்த நிர்வாக அதிகாரி கூறினார். அதே நேரத்தில், இது குறித்த பணிகள் இன்னும் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க எரிசக்தித் துறைச் செயலாளர் கிறிஸ்டோபர் ரைட்டின் சமீபத்திய கருத்துக்களை அந்த அதிகாரி மேற்கோள் காட்டி பேசினார். அதாவது அமெரிக்காவுடன் வெனிசுலா எண்ணெயை ஏறக்குறைய அனைத்து நாடுகளுக்கும் விற்கத் தயாராக இருக்கும் என்று ரைட் கூறியிருந்தார். ஃபாக்ஸ் பிசினஸ் உடனான ஒரு நேர்காணலில், அமெரிக்கா வெனிசுலாவில் இருந்து எண்ணெய் எடுப்பதை மீண்டும் அனுமதிக்கிறது, ஆனால் கடுமையான விதிமுறைகளின் கீழ் மட்டுமே என்று ரைட் தெரிவித்தார்.

அமெரிக்கத் தடைக்கு முன்பு, இந்தியா வெனிசுலாவின் மிகப்பெரிய எண்ணெய் வாடிக்கையாளர்களில் ஒன்றாக இருந்தது, இந்தியாவின் சிக்கலான (complex) சுத்திகரிப்பு நிலையங்களை இயக்குவதற்காக அந்நாடு கனரக கச்சா எண்ணெயை வாங்கி வந்தது. தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த  வர்த்தகம் இந்தியாவின் எரிசக்தி இறக்குமதிகளைப் பல்வகைப்படுத்த உதவும்.

நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு எரிசக்தி மாநாட்டில் பேசிய ரைட், அமெரிக்கா தற்போது ஆண்டுதோறும் 30 முதல் 50 மில்லியன் பீப்பாய் வெனிசுலா எண்ணெயை விற்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதைத் தொடர்ந்து எதிர்கால உற்பத்தியையும் தொடர்ந்து விற்பனை செய்ய உள்ளதாகவும் கூறினார்.

டொனால்ட் டிரம்ப் என்ன சொன்னார்? இதற்கிடையில், முன்னாள் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு எட்டப்பட்ட ஒரு புதிய ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்கா வெனிசுலாவின் 50 மில்லியன் பீப்பாய்கள் வரை கச்சா எண்ணெயை விற்கும் என்று டிரம்ப் கூறினார். நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் உலகின் சில பெரிய எண்ணெய் நிறுவனங்களின் நிர்வாகிகளுடனான ஒரு கூட்டத்தில் பேசிய டிரம்ப், இந்த நடவடிக்கையை ஒரு பொருளாதார வாய்ப்பு என்று விவரித்தார். வெனிசுலா மிகவும் வெற்றிகரமான நாடாகப் போகிறது என்றும் அவர் கூறினார். அந்த நாட்டின் எண்ணெய் துறையைக் குறிப்பிடுகையில், “நம்மிடமிருந்து பறிக்கப்பட்டதை நாம் மீண்டும் எடுத்துக்கொள்கிறோம்” என்று அவர் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version