ரஷ்யா உடனான போரை நிறுத்த அமெரிக்கா முன்மொழிந்துள்ள 20 அம்ச திட்டம் கொண்ட அமைதி ஒப்பந்தத்தில் பெரும்பாலானவற்றை ஏற்றுக் கொள்வதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி முதல் கடும் தாக்குதல் நிகழ்ந்து வருகிறது. இருதரப்பு தாக்குதலில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதில், உக்ரைனுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், தாக்குதல்களை நிறுத்துவதற்கு இருநாடுகள் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதனையடுத்து, அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து தீவிரப்படுத்தினார். ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் நேரில் பேச்சுவார்த்தையும் நடத்தினார். இருப்பினும், போரை நிறுத்துவதில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இருதரப்பு தாக்குதல்களை  நிறுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை ஏற்பதில் உக்ரைன் தயக்கம் காட்டியது. இதனால் அமைதி ஏற்படவில்லை. இருப்பினும், அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்தது. இதனடிப்படையில் போர் நிறுத்தம் தொடர்பான 20 அம்சத்திட்டம் தயாரிக்கப்பட்டது. அதில் பெரும்பாலான திட்டங்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சில பிராந்திய பிரச்னைகள் மட்டுமே நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் உக்ரைன் ஏற்றுக் கொண்ட நிலையில், அந்த ஒப்பந்தம் விரைவில் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

போருக்கு பிந்தைய கட்டுமானப் பணிகள் மற்றும் பாதுகாப்பு உறுதி மொழிகள் குறித்து உக்ரைன் மற்றும் அமெரிக்கா இடையே தனியாக இருதரப்பு ஒப்பந்தம் போடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version