தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சியைப் பிடிக்க இன்னும் 12 இடங்கள் தேவைப்படும் நிலையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் அக்கட்சியைப் பிளவின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது.
இந்த அரசியல் சதுரங்கத்தின் பின்னணியில் பாஜகவின் மேலிடம் இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. அண்டை மாநிலமான கேரளாவில் காங்கிரஸ் கட்சி மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தமிழகத்திலும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் ஒரு தவெக அரசு அமைவதை பாஜக விரும்பவில்லை.
காங்கிரஸ் ஆதரவுடன் விஜய் ஆட்சிப் பொறுப்பேற்றால், அது தேசிய அளவில் எதிர்க்கட்சிகளுக்குப் பலம் சேர்க்கும் என டெல்லி கருதுகிறது. எனவே, தவெக-விற்குத் தேவையான ஆதரவை அதிமுக மூலம் வழங்கச் செய்து, ஒரு வலுவான “திராவிட-தேசிய” கூட்டணியை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ உருவாக்க பாஜக அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
லீமா ரோஸ் மார்ட்டின் கொடுத்த ‘ஷாக்’
இந்த விவகாரம் செவ்வாய்க்கிழமை இரவு விஸ்வரூபம் எடுத்தது. அதிமுகவின் மூத்த நிர்வாகி லீமா ரோஸ் மார்ட்டின், தவெக மற்றும் அதிமுக இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தற்செயலாகத் தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் பின்னணியில் உள்ள குடும்ப உறவுகளும் கவனிக்கத்தக்கவை. லீமா ரோஸின் மருமகன் ஆதவ் அர்ஜுனா, விஜய்யின் மிக நெருங்கிய அரசியல் ஆலோசகராகவும், தவெக தரப்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பவராகவும் இருக்கிறார். அதேபோல், லீமா ரோஸின் மகன் புதுச்சேரியில் என்.டி.ஏ (NDA) கூட்டணியின் எம்.எல்.ஏ-வாக உள்ளார். இவர்களின் மூலமாகவே இந்தத் தூதுப் படலம் முடுக்கிவிடப்பட்டதாகத் தெரிகிறது.
அதிமுகவில் வெடித்த அதிருப்தி
செவ்வாய்க்கிழமை நடந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் எவ்வித முடிவும் எட்டப்படாமலேயே முடிவடைந்தது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விஜய்யின் கீழ் பணியாற்றுவதை அல்லது அவருக்கு ஆதரவு அளிப்பதைக் கடுமையாக எதிர்க்கிறார். ஆனால், கட்சிக்குள் இருக்கும் ஒரு பெரும் குழு, ஆட்சியில் பங்கு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
இந்த அதிருப்திக் குழுவை முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் முன்னெடுப்பதாகத் தோன்றினாலும், இதன் உண்மையான மூளை மற்றும் பலமாக இருப்பது எஸ்.பி. வேலுமணிதான் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொங்கு மண்டலத்தின் செல்வாக்கு மிக்க தலைவரான வேலுமணிக்கு டெல்லி மேலிடத்துடன் நேரடித் தொடர்புகள் உள்ளன. இவருடன் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் நன்னிலம் எம்.எல்.ஏ காமராஜ் ஆகியோரும் கைகோர்த்துள்ளனர்.
“மக்களின் தீர்ப்பு விஜய்க்குச் சாதகமாக உள்ளது. தவெக-வே நம்மை அணுகும் போது, நாம் ஏன் வெளியில் நிற்க வேண்டும்? அமைச்சரவையில் இடம் பெற்று நிர்வாக ரீதியாகப் பலம் பெறுவதே கட்சிக்கு நல்லது,” – என்பது அதிமுகவைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ ஒருவரின் வாதம்.

எஸ்.பி. வேலுமணி கட்டுப்பாட்டில் 21 எம்.எல்.ஏ-க்கள்?
அதிமுகவிடம் தற்போது உள்ள 47 எம்.எல்.ஏ-க்களில், சுமார் 10 பேர் மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு விசுவாசமாக இருப்பதாகத் தெரிகிறது.
எஸ்.பி. வேலுமணி, சுமார் 21-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களைத் தன் வசப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோன்று சி.வி. சண்முகத்துக்குப் பின்னால் 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் இருப்பதாகத் தெரிகிறது.
இந்த இருவரும் இணைந்தால், அதிமுக முறைப்படி இரண்டாகப் பிளந்து, தவெக அரசு அமைவதற்குத் தேவையான 10 எம்.எல்.ஏ-க்களுக்கு மேலான ஆதரவை எளிதாக வழங்கிவிட முடியும். புதன்கிழமை நடைபெறும் இரண்டாவது கட்ட எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படாவிட்டால், அதிமுக அதிகாரப்பூர்வமாகப் பிளவுபடுவதைத் தவிர்க்க முடியாது என்றே தோன்றுகிறது.
எடப்பாடி தயக்கம் ஏன்?
முன்னாள் முதலமைச்சராகவும், ஒரு பெரிய திராவிடக் கட்சியின் தலைவராகவும் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அரசியலுக்குப் புதியவரான விஜய்யின் கீழ் ஒரு துணை முதலமைச்சர் பதவியையோ அல்லது சில அமைச்சர் பதவிகளையோ ஏற்பது தனது அரசியல் கௌரவத்திற்கு இழுக்கு எனக் கருதுகிறார். மேலும், இது அதிமுகவின் தனித்தன்மையை அழித்துவிடும் என்பதும் அவரது அச்சமாக உள்ளது.
ஆளுநரின் நிலைப்பாடு
தமிழகத்தின் இந்த அசாதாரண அரசியல் சூழலை ஆளுநர் மாளிகை உன்னிப்பாக கவனித்து வருகிறது. தவெக தலைவர் விஜய், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான ஆதரவு கடிதங்களுடன் வரும் வரை ஆளுநர் சென்னை திரும்ப வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. ஒரு தெளிவான நிலவரம் தெரிந்த பின்னரே ஆளுநர் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பார் என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் எதிர்காலம் மற்றும் தமிழகத்தின் அடுத்த அரசு யாருடையது என்பது புதன்கிழமை மாலைக்குள் தெரியவரும். எடப்பாடி பழனிசாமி தனது பிடியைத் தக்கவைத்துக் கொள்வாரா அல்லது வேலுமணி-சண்முகம் கூட்டணி அதிமுகவை புதிய பாதையில் (அல்லது பிளவில்) இட்டுச் செல்லுமா என்பதே இப்போது தமிழக அரசியலில் பரபரப்பாக விவாதிக்கப்படும் விஷயமாக உள்ளது.
- பா. முகிலன்
