தூத்துக்குடியில், காங்கிரஸ் நிர்வாகியின் ஆட்டோவை சேதப்படுத்தியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் இருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறியதுமே, காங்கிரசை நம்பிக்கைத் துரோகி என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார். திமுக குறித்து காங்கிரஸ் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திமுக, காங்கிரஸ் மோதல் என்பது கைகலப்பாகவும் மாறி வருகிறது.

தூத்துக்குடியில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரை மிரட்டியவர்கள் அவரது ஆட்டோவை சேதபடுத்தியுள்ளனர்.

மக்களவை எதிர்கக்ட்சி தலைவர், ராகுல் காந்தி குறித்து அவதூறாக பேசிய முன்னாள்  திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கண்டித்து தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில்  மாநகர காங்கிரஸ் கட்சி தலைவர் சகாயராஜ் தலைமையில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு அனிதா ராதாகிருஷ்ணன் புகைப்படத்தை செருப்பால் அடித்து மற்றும் தனது கண்டனத்தை பதிவு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அமுதா நகரைச் சேர்ந்த 50வது வார்டு காங்கிரஸ் தலைவர் காமராஜ் என்பவரும் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில், காமராஜ் தனது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த ஆட்டோவை மர்மநபர்கள் இருவர் சேதப்படுத்தியோடு, காமராஜை மிரட்டிவிட்டு, அவரது வீட்டையும் சேதப்படுத்தியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்களான லட்சுமணன், இசக்கிமுத்து ஆகிய இருவர், மதுபோதையில் வந்து ஆட்டோவை சேதப்படுத்திவிட்டு, தனக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக காமராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து காமராஜ் அளித்த புகாரின் பேரில், தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version