துணை முதலமைச்சராக உள்ள உதயநிதிக்கு சப்ஜெக்ட் நாலெட்ஜ் இல்லாதது நம்முடைய சாபக்கேடு என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையிடம் மெட்ரோ ரயில் கோவைக்கும், மதுரைக்கும் மறுக்கப்பட்டுள்ள விவகாரத்தில் பிரதமரை சந்திக்கத் தயார் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது, “பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவில்லை. பிரதமர் மோடி கோவை வந்தபோதும், மு.க.ஸ்டாலின் வரவில்லை. எதிர்க்கட்சியாக உள்ள மாநிலங்களில் கூட பிரதமர் மோடி வந்தால் சந்திக்க வருகின்றனர். ஆனால், பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம், ஒவ்வொருமுறையும் ஒரு காரணத்தை சொல்கிறார்கள்.
தமிழக முதலமைச்சருக்கு கோவை, மதுரைக்கு மெட்ரோ வரக்கூடாது என்ற எண்ணம்தான் உள்ளது. ஆகையால்தான் மெட்ரோ விவகாரத்தில் அவர் கவனம் செலுத்தவில்லை. தமிழக அரசு மதுரை, கோவைக்கு மெட்ரோ வேண்டுமென்று கொடுத்த அறிக்கையில் என்ன தவறுகள் உள்ளது என கடிதம் வெளியிட்டுள்ளோம். அது DPR வரைமுறைக்கு உட்பட்டதாக இல்லை. மீண்டும் அதனை சரி செய்து மத்திய அரசிடம் கொடுக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.
மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என கனிமொழியின் குற்றச்சாட்டுக்கு, “இந்தியா முழுவதும் வரைமுறை வகுக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் பார்வையில் மாநிலங்களுக்கு நிதி பகிர்வு செய்யப்படும். அந்தவகையில், தமிழகத்திற்கான நிதி பகிர்வு 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் மெட்ரோவுக்கு என அதிக நிதி கொடுக்கப்பட்டது தமிழகத்தில் சென்னை மாவட்டத்திற்கு தான்” என பதிலளித்தார்.
மேலும், “ஈரப்பதம் என்பது விவசாயிகளுக்கு எப்போதும் இருக்கும் பிரச்சனை தான். அதிக மழை பெய்தபோது, மத்திய அரசு நெல் ஈரப்பதத்தை 19.5 வரை தளர்த்தியுள்ளது. நெல்லை பாதுகாக்க புதிய குடோன்கள் கட்டவேண்டும். தார்ப்பாய்கள் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு நிதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் ரூ.360 கோடி ஊழல் நடந்துள்ளது.
குறிப்பாக, தயாராக இருக்கும் நெல்லை கொள்முதல் செய்ய 60 நாட்கள் எடுத்துள்ளனர். உடைந்த அரிசியாக இருந்தாலும், அதனை 5 – 6 % எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், திமுக அரசு ஈரப்பதம் இல்லாமல் நெல்லை காப்பாற்ற தவறிவிட்டது. இதில் முக்கிய குற்றவாளி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.
மேலும், மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். முதலில் உதயநிதி என்ன பணி செய்தார்? என அவர்கள் கூற வேண்டும். உதயநிதி ஸ்டாலினுக்கு சப்ஜெக்ட் நாலெட்ஜே கிடையாது. இது நம்முடைய சாபக்கேடு” என அண்ணாமலை விமர்சித்தார்.
