அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகத்துக்கு பதவி அரிப்பு காரணமாக இல்லாததைச் சொல்வதாக ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவளிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியதாக சி.வி.சண்முகம், தெரிவித்தது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு விடையளித்தவர், திமுக ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக செயல்படும் என திமுக தலைவர் தெளிவுபடுத்தி விட்டதாகவும், எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தியது, சட்டமன்றக் குழு தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்வு செய்தது என ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படவேண்டியவற்றை திமுக தலைவர் செய்துவிட்டார் எனக் கூறினார்.
சி.வி.சண்முகம் பதவியிலேயே இருந்து பழக்கப்பட்டவர் எனவும், தனது பதவி அரிப்புக்காக அதிமுகவுக்கு திமுக ஆதரவு தெரிவிப்பதாக இல்லாததைக் கூறுவதாகவும் கடுமையாக விமர்சித்தார்.
தமிழக வெற்றி கழகத்திற்கு போக வேண்டும் என்ற காரணத்திற்காக எங்களை காரணம் காட்டி சி.வி.சண்முகம் எதையும் செல்ல வேண்டாம் எனக் கூறினார்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு 234 தொகுதிகளில் கூட்டணியோடு 220 தொகுதிகளில் கலைஞர் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தது, அந்த வரலாறை இன்று வரை யாரும் மாற்ற முடியவில்லை எனக் கூறியவர், ஒரே ஒரு தொகுதி மட்டுமே தேர்தலில் திமுக வென்றபோதும் அதற்காக கலங்காத இயக்கம் திமுக எனத் தெரிவித்தார்.
