“திமுக – காங்கிரஸ் இடையேயான உரசல் போக்குகள் பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பின் குறைந்துவிட்டுட்டதே” என நினைக்கும் வேளையில், தனது ஆட்டத்தை மீண்டும் ஆரம்பித்திருக்கிறது காங்கிரஸ் என்கிறது சமீபத்திய செய்தி. திமுகவை மிரட்டிப்பார்க்கிறதா காங்கிரஸ்? என யோசிக்கும் அளவிற்கான அத்தகைய நடவடிக்கை என்ன என்பதை பார்க்கலாம்.
‘ஆட்சியில் பங்கு’ மற்றும் ‘அதிக தொகுதிகள் வேண்டும்’ போன்ற உள்ளடி கோஷங்களோடு திமுகவோடு முட்டி மோதும் காங்கிரஸ், அந்த நடவடிக்கைகளின் நீட்சியாக ‘முன்கூட்டியே விருப்ப மனுக்களை வாங்கும்’ செயல்பாட்டை தொடங்கியுள்ளது. “ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்கு முன்பாக செய்யும் வேலை தானே இது?” என நீங்கள் நினைப்பது சரி தான். ஆனால், காங்கிரசை பொறுத்தவரை அதன் இந்த செயல்பாட்டுக்கான இந்த காலம் தான் இந்த செயல்பாட்டை பேசுபொருளாக்கியுள்ளது.
அதாவது, “தனித்து தான் போட்டியிடுவோம்” என்கிற கட்சிகள் இப்போதே விருப்ப மனுக்களை வாங்கினால் அது சலசலப்புக்குரிய விஷயமல்ல. அதுவே, பிரதான கட்சியான திமுகவோடு கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளுக்கு முன்பாகவே 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்களை பெற வேண்டிய சூழலும் தேவையும் என்ன இருக்கிறது? என்பது தான் இந்த ஒட்டுமொத்த சலசலப்புக்கு பின்னணியில் தொக்கி நிற்கும் ஒரே கேள்வி. அதற்கு பின்னணியில் ஒரு டெல்லி நகர்வு இருக்கிறது என்கின்றனர் ஒருசில சத்தியமூர்த்தி பவன் கதர்வாசிகள்.
அதாவது, தமிழக வெற்றி கழகத்தோடு கூட்டணி அமைக்க வியூகம் வகுத்து வரும் காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபாலும், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கரும் ஒன்றாக இணைந்து கொடுத்த அழுத்தத்தின் பேரிலேயே செல்வப்பெருந்தகையிடமிருந்து இந்த அறிவிப்பு வந்துள்ளதாம். வரும் 14ம் தேதி டெல்லியில் ராகுல் தலைமையில் ‘வாக்கு திருட்டை எதிர்க்கும் கண்டன பேரணி நடக்கவுள்ளது. அதனை தொடர்ந்து மறுநாள் 15ம் தேதி திமுகவுடனான கூட்டணியை தொடர்வதா அல்லது தவெகவுடன் கூட்டணி வைக்கலாமா என்பது குறித்து முடிவெடுக்க ஆலோசனை ஈடுபடவுள்ளதாம் டெல்லி தலைமை. அதனால் தான் வரும் 31ம் தேதி வரை விருப்ப மனு பெற முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பால் காங்கிரசில் இருக்கும் திமுக ஆதரவு புள்ளிகள் கையை பிசைந்து கொண்டிருக்க, இந்த பக்கம் கொஞ்சம் ‘ஷாக்’ ஆகித்தான் இருக்கிறதாம் திமுக.
நகர்வுகள் ஒருபுறம் இப்படி இருக்க, இந்த முயற்சிகளுக்கான ஆதரவையும் கூட்டணி ஆட்சி மீதான காங்கிரஸாரின் வேட்கைகளையும் தூண்டும் வகையில் சில காங்கிரசார், இதுவரை கூட்டணி ஆட்சி குறித்து தங்களது கருத்துக்களை கூறிய சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி.,க்கள் விஜய் வசந்த், சசிகாந்த் செந்தில், கார்த்தி உள்ளிட்ட கட்சியின் முக்கிய தகலைவர்கள் பேசிய பேச்சுக்களை சேகரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
ஆக, “இந்த நகர்வுகளின் தீவிரத்தை பார்க்கும்போது, கட்சியை வளர்க்க தொகுதிப்பங்கீட்டில் கூடுதல் இடங்களை பெறுவதோடு மட்டுமல்லாமல் ஆட்சியில் பங்கை காங்கிரஸ் பெறாமல் விடாது என்பது புரிகிறது. ஒருவேளை அவையனைத்தும் நடக்காத பட்சத்தில் தமிழக வெற்றி கழகம் பக்கம் போனாலும் போய்விடும்” என்கின்றனர் இந்த நகர்வுகளை உற்று நோக்கும் அரசியல் விமர்சகர்கள்.
