கடந்த திமுக ஆட்சியில் ஒரு சில நிறுவனங்கள் மின்வாரியத்தில் விதிமிறல்களில் ஈடுபட்டதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில், மின்துறையின் விநியோக நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.

எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மின்வாரியத்துடன் தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள், மின் உபகரணங்களின் விநியோகஸ்தர்கள், வழங்குநர்கள் மற்றும் கொள்முதல் நிறுவனங்களுடன் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.

கூட்டத்தில் டெண்டர் நடைமுறைகள், மின் உற்பத்தியில் ஏற்படும் பற்றாக்குறைகள், திட்ட செயல்பாடுகளில் நிலவும் சிரமங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட மின் துறையின் விநியோக நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள், தங்களது பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை அமைச்சரிடம் நேரடியாக முன்வைத்தனர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், துறையுடன் தொடர்புடைய குறைகளுக்கு உரிய காலக்கெடுவில் நிரந்தர தீர்வு காணப்படும் என்றும், எந்தவித முறைகேடுகள் நடந்தாலும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

மேலும், மின் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக அரசு தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயல்படும் என்றும் தெரிவித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்,

“கடந்த ஆட்சியில் ஒரு சில நிறுவனங்கள் ஒரு தலைப்பட்சமாக இருந்திருக்கிறார்கள் மற்றும், விதிமீறல்களும் செய்திருக்கிறார்கள், அவர்களைக் கண்டறிந்து அவர்கள் செய்த குற்றத்திற்கான ஆதாரங்கள் திரட்டி இருக்கிறோம். தமிழ்நாடு மின்சாரத் துறை சரிவிற்கு சென்றதற்கு அவர்கள் தான் காரணம் என தெரிவித்தார்.

“அடிப்படை விஷயங்களை சரி செய்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் டெண்டரை நிறுத்தி வைத்துள்ளோம், அனைத்தையும் சரி செய்த பின் வெளிப்படைத்தன்மையுடன் டெண்டர்கள் அனைத்தும் தொடரும்” என்றார்.

சென்னையில் மின் தடை ஏற்படுவது குறித்த கேள்விக்கு, கிட்டத்தட்ட 7 ரோந்து வாகனங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம். மின்தடை ஏற்படும் இடங்களுக்குச் சென்று பிரச்சினையை கண்டறிந்து அதனை சரிசெய்து வருகிறோம். சில இடங்களில் வேண்டுமென்றே டிரான்ஸ்பர்களை செயலிழக்க செய்திருக்கின்றனர். அவர்கள் மீது போலீசாரிடம் புகார் அளித்திருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

ஆங்காங்கே நடக்கும் பாலியல் வன்கொடுமை தொடர்பான கேள்விக்கு, “கோவையில் நடைபெற்ற சிறுமி பாலியல் வன்முறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார், மேலும் மதுரையில் நடந்த கொலை சம்பவத்திற்கு மூன்று மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும்  சட்டத்திற்கு புறம்பாக எங்கெல்லாம் போதை பொருட்கள் புழக்கம் இருக்கிறதோ அதனை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து தொடர்பான கேள்விக்கு, “எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். இன்னமும் அவரது அப்பாவின் ஆட்சி நடைபெறுகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். தமிழக வெற்றி கழகத்திற்கு கடைக்கோடி கிராமத்தில் கூட வாக்குகள் அளித்திருக்கிறார்கள்,  கொளத்தூரில் கூட வாக்களித்திருக்கிறார்கள், எனவே இந்த ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைத்திருக்கிறார்கள்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version