மிழ்நாட்டின் அரசியல் களம் தொடர்ச்சியான மாற்றங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், தமிழக வெற்றி கழகம் தலைமையில் உருவான புதிய அரசில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தவெக தலைமையில் அமைந்த கூட்டணி அரசு, இப்போது இந்த இரு கட்சிகளின் ஆதரவுடன் வலுவான அடித்தளத்தைப் பெற்றுள்ளது. விசிக சார்பில் வன்னி அரசு சமூக நீதி, ஆதி திராவிடர் நலன் மற்றும் மலைவாழ் மக்கள் நலத் துறை ஆகிய முக்கிய பொறுப்புகளை ஏற்றுள்ளார். அதேபோல், ஐயூஎம்எல் சார்பில் ஏ.எம். ஷாஜஹான் சிறுபான்மையினர் நலத் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த இணைப்பு, தவெக அரசுக்கு கூடுதல் வலு சேர்க்கும் நடவடிக்கையாக அரசியல் வட்டாரங்கள் பார்க்கின்றன.

இந்த நிலையில், தவெக அமைச்சரவையில் விசிகவும், ஐயுஎம்எல் கட்சியும் இடம்பெற்றதை திமுகவின் ஆ.ராசா தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாகத் தாக்கி பதிவிட்டார்.

ஆ.ராசா தனது பதிவில்,

”முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’

மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’

வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு

முட்டுக் கொடுக்குமென்றால்;

பூ முடித்தவனை புறந்தள்ளி —

புணர்ச்சிக்கு வேறிடம்

தேடுவதில் தவறில்லை!

பெரியாரின்

‘காலதேச வர்த்தமான’ த்திற்கு

காத்திருப்போம் ;  என்றாலும்

களமாடுவோம் !

வெற்றி நமக்கே!!” என்று காட்டமாக விமர்சித்தார்.

இதற்கு விசிக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்ட நிலையில், பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, ஆ. ராசா தனது இந்தப் பதிவை நீக்கினார்.

இந்நிலையில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், இந்த நடவடிக்கையை வரவேற்று வன்னி அரசு மற்றும் ஏ.எம். ஷாஜஹான் ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனது சொந்த முடிவுகளை எடுக்கும் முழு உரிமை உண்டு என்பதை அடிப்படையாகக் கொண்டு, திமுக தொண்டர்கள் யாரையும் மனதளவில் புண்படுத்தும் வகையில் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அவர் தெளிவாக வலியுறுத்தியுள்ளார்.

“பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம்” என்று நினைவூட்டிய அவர், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டும் என்று திமுகவினருக்கு அறிவுறுத்தியுள்ளார். எந்தக் கட்சிக்கும் தனது அரசியல் பாதையைத் தேர்வு செய்யும் உரிமை இருப்பதால், இந்த நேரத்தில் உணர்ச்சிவசப்படாமல், அமைதியான முறையில் செயல்பட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version