அதிமுகவின் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியதால் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் முறையீடு.
அதிமுகவில் தற்போது எம்.எல்.ஏக்கள் 2 குழுவாகப் பிரிந்து நிற்கும் நிலையில், தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏக்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான மாவட்டச் செயலாளர்களை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமினும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியில் சென்று பெஞ்சமின் கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் சேர்ந்து விசுவாசமாக இருந்து கட்சியின் பொறுப்பை சிறப்பாக செய்த என்னை கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கியதற்கான காரணம் என்ன என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க வேண்டும் என பெஞ்சமின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவில் பல்வேறு கட்சிப் பணிகளை தீவிரமாக செய்ததாகவும் அமைச்சராகவும் மக்கள் பணிகளை சிறப்பாக செய்ததாகவும் விசுவாசத்திற்கு கிடைத்த பரிசு இதுதானா எனவும் கண்ணீர் மல்க கதறினார்.
சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லை என்ற பட்சத்தில் கட்சி பொறுப்பில் இருந்து விசுவாசியான என்னை நீக்குவதற்கு காரணம் என்ன எனவும், எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆவதற்கு பல்வேறு கடும் உழைப்புகளை மேற்கொண்டவன் நான் எனவும் கூறியவர், தலைமையிடம் கேட்டதற்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
