தவெக. அரசு கடந்த மே 13-ஆம் தேதி பெரும்பான்மை நிரூபிக்கும் வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பை கோரியபோது, கட்சிக் கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறப்படும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், மதுராந்தகம் தொகுதி உறுப்பினர் மரகதம் குமாரவேல், பெருந்துறை தொகுதி ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி சத்தியபாமா, அம்பாசமுத்திரம் தொகுதி இசக்கி சுப்பையா, கரூர் தொகுதி எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் விராலிமலை தொகுதி சி. விஜயபாஸ்கர் ஆகிய ஆறு எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் பதில்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு பதிலளிக்கும் வகையில் மறுமனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
