’நீ அரியணை ஏறும் நாள் வரும்’ என தனது மகனுக்கு அவரது தாய் சோபா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைபெறவுள்ளது. பிற்பகல் 3.15 மணிக்கு இரவு 7.25 மணி வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான அணைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில், லட்சக்கணக்கான தொண்டர்கள் நேற்று இரவு முதலே மதுரையில் குவியத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், விஜய்க்கு அவரது தாய் சோபா சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ முதல் மாநாடு உன் பலத்தை காட்டியது.. மதுரை மாநாடு உன் படைபலத்தை காட்டுகிறது. திரையில் உன்னை பார்த்து உயர்த்திய தாய்மார்கள், தம்பி தங்கைகள் அரசியல் வெற்றிக்கு துணை நிற்கட்டும். வரவிருக்கும் தேர்தல் உன் இமாலய வெற்றியை காட்டும், நீ அரியணை ஏறும் நாள் வரும்.. அது உன் தொண்டர்களின் திருநாள். தமிழக வெற்றிக் கழகம் தடைகளை வெல்லும் கழகம் என்று காட்டு, நேர்மையான தலைவன் என்பதற்கு நீதான் எடுத்துக்காட்டு. உன்னோடு வரும் தொண்டர் படை இந்த நாட்டில் வேறு யாருக்கும் இல்லை, உன் வெற்றிக்கு வானமே எல்லை” என்று தெரிவித்துள்ளார்.