சென்னையில் அன்புமணி தலைமையில் நாளை நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு, நட்பு கட்சித் தலைவர்களுக்கு பாமக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், அனைத்து சமூகங்களுக்கும் சமூகநீதி வழங்கவும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு (Caste Survey) நடத்த திமுக அரசை பாமக வலியுறுத்தி வருகிறது. இக்கோரிக்கையை நிறைவேற்றக்கோரி, பாட்டாளி மக்கள் கட்சி நாளை (17.12.2025) காலை 11.00 மணிக்கு சென்னை எழும்பூர் இராஜரத்தினம் திடல் அருகில் தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்துகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், இந்தப் போராட்டத்திற்கு தலைமை வகிக்கவுள்ளார். சமூகநீதியில் அக்கறை கொண்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், சமூக இயக்கங்களின் தலைவர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள் என பாமக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
