பாமகவில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் கட்சிக்குள்ளே விரிசல் ஏற்பட்டுள்ளது. தனது உயிர்மூச்சு இருக்கும் வரை நான் தான் கட்சியின் தலைவர் என கூறிய ராமதாஸ், அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்தவர்களை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி, புதிய நிர்வாகிகளை அறிவித்தார்.

இதனால் கட்சிக்குள் குழப்பம் நீடிக்கிறது. இந்த நிலையில், என்னுடன் இருக்கும் நிர்வாகிகளுக்கு மட்டும் தான் எம்.எல்.ஏ., சீட் எனவும், பா.ம.கவில் எனக்கே அதிகாரம் உள்ளது எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இங்கே வந்து இருக்கும் பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் தான் தேர்தலில் நிற்க போகிறவர்கள். இவர்களை தான் நான் தேர்ந்து எடுப்பேன். இவர்கள் தான் எதிர்கால சட்டசபை உறுப்பினர்கள். ஏனென்றால் எனக்கு எல்லா அதிகாரமும் உண்டு.

அதனால் தான் நான் இந்த கட்சியின் தலைவராக பொறுப்பு ஏற்று, நல்லவர்களை, வல்லவர்களை சட்டசபை உறுப்பினராக ஆக்குவேன் என்று இந்த நேரத்தில் உங்கள் மூலம் சொல்ல விரும்புகிறேன். என்னை சந்தித்து கட்சியில் பொறுப்பு வாங்கிய நிர்வாகிகளே தேர்தலில் போட்டியிடுவார்கள்.

தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. சட்டசபை தேர்தலில் நல்ல கூட்டணி, வித்தியாசமான கூட்டணி, வெற்றி பெறும் கூட்டணி அமைக்கப்படும். முருக பக்தர்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா., அண்ணாதுரையை இழிவுபடுத்தியது தவறு. யாரையும் இழிவுபடுத்தக்கூடாது என ராமதாஸ் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version