தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், தான் ஏற்கெனவே வகித்து வந்த மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால், தமிழகத்தில் அந்த ஒரு இடத்துக்கான இடைத்தேர்தல் ஜூன் 18-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் பிரதிநிதித்துவ அடிப்படையில் அதிக எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட தவெகவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி ஒதுக்கப்பட வாய்ப்பு இருந்தது. ஆனால், கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு மாநிலங்களவை எம்.பி. இடத்தை ஒதுக்குவதாக தவெக தலைவரும், முதல்வருமான விஜய் அறிவித்தார். இதையடுத்து, மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சட்டப்பேரவைச் செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,”தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் சி.வி.சண்முகம் தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, தமிழ்நாடு சட்டப்பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை வாக்காளர்களாகக் கொண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சார்ந்த பிரவீன் சக்கரவர்த்தி முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

