2026ம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார்.

சட்டப்பேரவையின் மரபுப்படி ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் துவங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சட்டப்பேரவைக்கு இன்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார்.

முதலில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டது. பின்னர், தேசிய கீதம் இசைக்கப்படும் என்று ஆளுநர் காத்திருந்தார். ஆனால், தேசிய கீதம் இசைக்கப்படாமல், உரையைத் தொடங்குமாறு பேரவைத் தலைவர் அப்பாவு ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து தமிழக அரசு தயாரித்த உரையைப் படிக்க மறுத்த ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடர்ச்சியாக தேசிய கீதம் இசைக்க வேண்டுமென்று கூறியும், அதைப் பின்பற்றாதது வருத்தமளிப்பதாகக் கூறி, பேரவையைவிட்டு ஆளுநர் வெளியேறினார்.

தமிழக சட்டப்பேரவை மரபுப்படி, ஆளுநர் உரைக்கு முன்பு தமிழ்த் தாய் வாழ்த்தும், உரைக்கு பின்பு தேசிய கீதமும் இசைக்கப்படுவதே வழக்கம் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். அரசியலமைப்பை ஆளுநர் தொடர்ந்து மீறுவதாக தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆண்டின் முதல் கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறையை மாற்ற பிற மாநில அரசியல் கட்சிகளுடன் இணைந்து முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

பின்னர், தமிழ்நாடு அரசு தயாரித்த ஆளுநர் உரையை அவர் படித்ததாக அவைக் குறிப்பில் பதிவு செய்யும், முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.

2022, 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரிலும் உரையை புறக்கணித்து ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version