எங்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு யாரிடமிருந்தும் நற்சான்றிதழை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி காட்டம் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் ஜோதிமணி பதிவிட்டுள்ளதாவது: –
நீண்டகாலமாக காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்துப் பயணித்து வருகிறது. ஒரு கூட்டணியில் இருக்கும்போது மேடு பள்ளங்கள் ஏற்படுவது இயல்பு. நானே பலமுறை பகிரங்கமாக மோதியிருக்கிறேன். இப்போது, தமிழகத்தின் நலனையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, தமிழக காங்கிரஸ் கமிட்டி ஏகமனதாக தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கூட்டணி சேர முடிவெடுத்துள்ளது.
அரசியலில் கூட்டணிகள் உருவாவதும் பிரிவதும் இயல்பானதுதான். கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கூட, நீண்டகால கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியை திமுக வெளியேற்றியது. நாங்கள் திடீரென தனித்துப் போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். அதற்காக நாங்கள் திமுகவை கடுமையாக விமர்சிக்கவில்லை. அதை ஒரு அரசியல் நிலைப்பாடாகவே புரிந்துகொண்டோம்.
தற்போது, காங்கிரஸ் கட்சி ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே, பரஸ்பர மரியாதையுடன் கூட்டணியில் இருந்து பிரிந்து செல்வதே சிறந்தது. இரு தரப்பிலும் கடுமையான சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக, தற்போது நடந்து முடிந்த தேர்தலில் திமுக தோல்வியைச் சந்தித்துள்ள சூழலில்—அதுவும் மாண்புமிகு முதலமைச்சர், அண்ணன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களே தோல்வியடைந்திருக்கும் நிலையில்—நேற்று வரை கூட்டணியில் இருந்துவிட்டு இன்று மிகக் காட்டமாக விமர்சிப்பது அரசியல் நாகரிகமும் அல்ல, காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரமும் அல்ல.
காங்கிரஸ் கட்சியும் கூட கடந்த மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்துள்ளது. அதற்கு தேசிய அளவில் பல்வேறு காரணங்கள் உள்ளன. அதன் காரணமாக கூட்டணிகளே அமைக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்தால், இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியால் இந்தியா (INDIA) கூட்டணியைத் தலைமை தாங்கி நடத்தியிருக்க முடியாது.
அதேபோல, எங்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு யாரிடமிருந்தும் நற்சான்றிதழை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த நாட்டின் பாஜகவின் பாசிச ஆட்சியை சமரசமின்றி எதிர்த்து வீழ்த்தும் வலிமை கொண்ட ஒரே தலைவர் அவர்தான் என்பது தேசத்திற்குத் தெரியும். இதை நினைவில் கொள்ளுங்கள்: அவர் யாரால் சிறுமைப்படுத்தப்பட்டாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், மௌனமாக வேடிக்கை பார்க்கவும் மாட்டோம்.
அரசியலில் பழைய கூட்டணிகள் பிரிவதும், புதிய கூட்டணிகள் அமைவதும் இயற்கையானது என்ற அரசியல் புரிதலோடு, தமிழகத்தின் நலனையும் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் பாதையில் நாங்கள் முன்னோக்கிச் செல்வோம்.
இவ்வாறு ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
