“எதிர்காலத்தில் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாகச் செயல்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் சண்முகத்தின் கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சண்முகம், திமுக மற்றும் அதிமுகவுடன் சிபிஎம் மாறி மாறி கூட்டணி அமைப்பதும், எதிர்ப்பதும் அக்கால அரசியல் சூழ்நிலையைப் பொறுத்தது என்று தெரிவித்துள்ளார். தேர்தல் கூட்டணிகள் என்பது இருதரப்புக்கும் வெற்றி மற்றும் அரசியல் பலன் அளிக்கும் ஏற்பாடாகும் என்றும், ஒரு கட்சியின் கூட்டணி முடிவை மற்றொரு கட்சி “துரோகம்” எனக் கருத முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், “கூட்டணியில் சேர்த்த திமுக வெற்றிக்கு பலம் பத்தாததால்தான் கடைசி நேரத்தில் தேமுதிக போன்ற கட்சிகளை திமுக தனது அணியில் சேர்த்தது. எனவே ‘எங்களால் நீங்கள் ஜெயித்து, உங்களால் நாங்கள் ஜெயித்தோம்’ என்பதே யதார்த்தம். தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்திற்கும், மக்களின் விருப்பத்திற்கும் ஏற்பவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இப்போதைய அரசியல் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. கூட்டணியை விட்டு விலகினாலே தாக்கும் திமுக-வினரின் போக்கு தவறானது. உணர்ச்சிவசப்பட்டுப் பேசும் இத்தகைய நபர்களை திமுக தலைமைதான் கட்டுப்படுத்த வேண்டும். கொள்கைகள் சித்தாந்த ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் திமுகவையும் அதிமுகவையும் சமமாகக் கருத முடியாது. அதே சமயம், திராவிடக் கட்சிகள் தங்களின் பழைய விழுமியங்களையும் கொள்கைகளையும் தற்காலத்தில் முழுமையாகக் கடைப்பிடிப்பதில்லை. தேர்தல் அரசியலில் ஓட்டு வாங்குவதற்காக அவர்கள் சாதியப் பாகுபாடுகள் மற்றும் ஆணவக் கொலைகளுக்கு எதிராகக் களத்தில் நின்று போராடுவதில்லை. இவ்வாறு தம் கொள்கைகளில் பல சமரசங்களைச் செய்து கொண்டு, தங்களைத் தாழ்த்திக் கொண்டுள்ளனர். வரும் காலத்தில், திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாகச் செயல்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை ” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய இடதுசாரி கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, திமுக மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல்கள் அதிகரித்து வருகின்றன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக-திமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சிகள் நடைபெற்றதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்ட நிலையில், “நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும் அதில் என்ன தவறு இருக்கிறது?” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று கேள்வியெழுப்பி இருந்தார். இந்த நிலையில், சண்முகத்தின் இந்தக் கருத்து தமிழகத்தின் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
