திமுக அரசை கண்டித்து சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, டாஸ்மாக் கொள்ளை அமோகமாக நடக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை இருக்கிறது, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 24 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள்.விலைவாசி உயர்ந்துவிட்டது, வேலைவாய்ப்பு இல்லை, வருமானம் இல்லை, அரிசி, எண்ணெய், பருப்பு விலை 40% உயர்ந்துவிட்டதால் குடும்பம் நடத்தவே மக்கள் தத்தளிக்கிறார்கள்.
அதை குறைக்க ஸ்டாலின் கவனம் செலுத்தவில்லை. தினமும் போட்டோ ஷூட் எடுப்பதுதான் விடியா திமுக ஆட்சியின் சாதனை.மின்கட்டணம் பல மடங்கு உயர்வு, அதிமுக ஆட்சியில் ஆயிரம் என்றால் இப்போது 2500 ரூபாய், 67% உயர்வு. கடைகளுக்கு பீக் ஹவர், ஆண்டுக்கு 5% உயர்வு. வீட்டு வரி 100% உயர்வு, ஆண்டுக்கு 6% உயர்வு. கட்டிடம் கட்டுவதற்கான அனுமதிக் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துவிட்டது. ஆயிரம் சதுரடிக்கு அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சி மாநகராட்சியில் 3 மடங்கு அதிகம். கட்டுமானப் பொருட்கள் விலை உயர்ந்துவிட்டது.
கட்டுமானப் பொருட்கள் விலை உயரும்போது, அது அத்தியாவசியப் பட்டியலில் சேர்க்கப்பட்டு கட்டுப்படுத்தப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நானும் சட்டமன்றத்தில் இதுபற்றி கேட்டேன், எந்த பதிலும் இல்லை என்று குற்றம்சாட்டினார்.
