தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் பயங்கர பரபரப்பாக உள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக மற்றும் பாஜக இடையிலான அதிகாரப்பூர்வ கூட்டணி ஒப்பந்தம் வரும் மார்ச் 20-ஆம் தேதி கையெழுத்தாகும் என பாஜக முக்கிய நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக இரு கட்சிகளுக்கும் இடையே திரைமறைவில் நடந்து வந்த பேச்சுவார்த்தைகள் தற்போது சுமுகமான முடிவை எட்டியுள்ளதாகத் தெரிகிறது.

தொகுதிப் பங்கீட்டைப் பொறுத்தவரை, தொடக்கத்தில் பாஜக தரப்பில் 35 தொகுதிகள் வரை கோரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் மற்ற கூட்டணிக் கட்சிகளான பாமக மற்றும் அமமுக ஆகியவற்றுக்கு ஒதுக்க வேண்டிய இடங்களைக் கருத்தில் கொண்டு, பாஜகவிற்கு 27 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக தலைமை முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த எண்ணிக்கையில் இரு தரப்பிற்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதால், ஒப்பந்தம் கையெழுத்தாவது உறுதியாகியுள்ளது.

இந்தக் கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள நிலையில், மார்ச் 20-ஆம் தேதி நடைபெறும் ஒப்பந்த நிகழ்வின் போது எந்தெந்தத் தொகுதிகள் யாருக்கு என்பது குறித்த இறுதிப் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் பிரச்சாரப் பணிகளை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த இரு கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியை எதிர்கொள்ள இந்த பலமான கூட்டணி அமையப் போவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version