தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு டிஜிட்டல் முறையில் பணம் வழங்கப்படுவதைத் தடுக்க, வங்கிகள் மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ (UPI) செயலிகள் மூலம் சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகள் நடந்தால், அது குறித்து உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி வங்கி ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நேர்மையாகவும், பண நாயகத்திற்கு இடமின்றியும் நடப்பதை உறுதி செய்யப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் காலத்தில் தனிநபர்களின் வங்கி கணக்குகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவிலான பணப் பரிவர்த்தனைகள் நடந்தால், அது குறித்த தினசரி அறிக்கையை  வங்கிகள் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்தல் நேரத்தில் ஒரு வங்கி கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக பணம் எடுக்கப்பட்டாலோ அல்லது வரவு வைக்கப்பட்டாலோ அது தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.

ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கிலிருந்து RTGS அல்லது இணைய வழிப் பரிவர்த்தனை மூலம் ஒரே தொகுதியைச் சேர்ந்த பல நபர்களுக்குப் பணம் அனுப்பப்பட்டால், அது வாக்காளர்களுக்குப் பணம் வழங்கும் முயற்சியாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

வேட்பாளர், அவரின் மனைவி/கணவர் அல்லது சார்பாளர்கள் கணக்குகளில் ரூ.1 லட்சத்தை மீறும் பணம் எடுப்பு அல்லது வைப்பு நடந்தால் அதையும் கண்காணிக்க வேண்டும்.

அரசியல் கட்சிகளின் வங்கி கணக்குகளில் நடைபெறும் ₹1 லட்சத்திற்கும் அதிகமான வரவு-செலவுகள் அனைத்தும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு தேர்தல் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version