தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், சிவகங்கை மாவட்டம் அஜித்குமார் மற்றும் ஆகாஷ் ஆகியோரின் கஸ்டடி மரணங்கள் ஆளும் அரசுக்கு பெரும்  தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் 2020-ல் சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் அதிமுக அரசுக்கு எத்தகைய பின்னடைவை ஏற்படுத்தியதோ, அதேபோன்றதொரு சூழல் தற்போதும் நிலவுகிறது. குறிப்பாக, அஜித்குமார் வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதும், ஆகாஷ் மரண வழக்கில் காவல்துறை சித்திரவதை குறித்த ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதும் தென் மாவட்டங்களில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தை மையமாக வைத்து எதிர்க்கட்சிகள் தங்களின் தேர்தல் பரப்புரையைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டம்-ஒழுங்கு சீர்குலைவைச் சுட்டிக்காட்டி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது முதல் அரசியல் போராட்டத்தையே அஜித்குமார் மரணத்திற்காகச் சென்னையில் “சாரி மா” (Sorry Ma) என்ற பதாகையுடன் முன்னெடுத்தார். நாம் தமிழர் கட்சியின் சீமான், காவல்துறையின் அதிகார அத்துமீறலைத் தடுக்கப் புதிய நிர்வாக மாற்றங்கள் அவசியம் எனத் தனது தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் நிகழ்ந்துள்ள சுமார் 27 கஸ்டடி மரணங்கள், குறிப்பாகத் தலித் மற்றும் விளிம்புநிலை மக்கள் மத்தியில் ஆழ்ந்த காயத்தை ஏற்படுத்தியுள்ளன. இது 2026 தேர்தலில் வாக்கு மாற்றத்திற்கு வழிவகுக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். சாத்தான்குளம் சம்பவம் போலவே, இந்த மரணங்களும் நடுநிலை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் காவல்துறை மீதான நம்பிக்கையைக் குறைத்து, அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கத் தூண்ட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version