காங்கிரஸ் 41 சீட்களை கேட்பதாக தகவல் வெளியான நிலையில், 1 எம்.பி.,க்கு 3 எம்.எல்.ஏ. சீட்கள் வீதம் 27 சீட்கள் கொடுக்க திமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் வருகிற சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை கூட்டணி என்ற சூழலே உருவாகி உள்ளது. எல்லா கட்சிகளும் ஓரளவிற்கு கூட்டணியை தேர்வு செய்து செட்டில் ஆகிவிட்டனர். தேமுதிக மட்டுமே தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்காமல் உள்ளது.

இதற்கிடையில் இந்த தேர்தலில் 40 இடங்களுக்கு அதிகமான தொகுதிகளை கோரிய காங்கிரஸ் ‘ஆட்சியில் பங்கு’ என்ற பேச்சையும் முன் வைத்தது. ஆனால் இந்த கூற்றை தீர்க்கமாக மறுத்து வந்தது திமுக. அப்போதுதான் திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகியே விடுமோ என்ற கேள்விகளும் எழுந்த வண்ணம் இருந்தன. ஆனால் இந்த அமளிகளுக்கு இடையில் காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தியும் திமுக எம்.பி கனிமொழியும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அந்த பேச்சு வார்த்தையில் கூட்டணி சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, என்ன ஆனாலும் திமுகவில் தான் காங்கிரஸ் தொடரும் என்ற உறுதியும் வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

ஆனால் தொகுதி பங்கீட்டு விவகாரம் இம்முறை திமுகவிற்கு மிகப்பெரும் சவாலாக அமையும் என சொல்லப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே திமுகவில் கூட்டணி கட்சிகள் அதிகம் உள்ளன. 120 இடங்களிலாவது திமுக தனித்து போட்டியிட்டு வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மையை பிடிக்க இயலும். மேலும் கூட்டணியில் உள்ள கட்சிகளின் வாக்கு வங்கியை பொருத்துதான் தொகுதி பங்கீடு செய்ய முடியும். காங்கிரஸ் இதற்கு முன்பு 80 சீட்டுகளை கேட்டிருந்ததாகவும் சொல்லப்பட்டது.

இந்தநிலையில், காங்கிரஸ் 41 சீட்களை கேட்பதாக தகவல் வெளியான நிலையில், 1 எம்.பி.,க்கு 3 எம்.எல்.ஏ. சீட்கள் வீதம் 27 சீட்கள் கொடுக்க திமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த எண்ணிக்கையை தாண்டி பேச்சுவார்த்தை சென்றால், தனது சர்வே ரிப்போர்ட்டை காண்பிக்கவும் திமுக தயாராகவுள்ளதாம். அந்த ரிப்போர்ட்டில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடு சரியாக இல்லை என்றும், அவர்கள் மீண்டும் களமிறங்கினால் என்.டி.ஏ. கூட்டணியே வெல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version