வலுவான கூட்டணியை அமைக்க பாஜக உதவியதால், அக்கட்சிக்கு கடந்த முறையை விட இந்த தேர்தலில் கூடுதல் சீட்களை தர எடப்பாடி பழனிசாமி முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடந்த சில மாதங்களாவே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இந்த கூட்டணியில் புதிய வரவாக டிடிவி தினகரன், அன்புமணி உள்ளிட்டோரும் இணைந்து விட்டனர்.
திமுகவுக்கு எதிராக பலமான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளையும் கூட்டணிக்குள் இழுக்க முயற்சிகள் நடந்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, அதிமுக தலைமையில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற ஆலோசனையிலும் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளாராம்.
அதாவது, கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 இடங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் 4 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. ஆனால், இம் முறை நயினார் நாகேந்திரன் கொடுத்துள்ளதாக கூறப்படும் பட்டியலில் 50 இடங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதனடிப்படையில் குறைந்தது 40 தொகுதிகளையாவது ஒதுக்கவேண்டும் என்று பாஜக கூறிவருவதாகவும் தெரிகிறது.
இருப்பினும், 20 சீட் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி கறார் வந்த நிலையில், தற்போது பாஜகவின் நடவடிக்கையால், அமமுக மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து கூட்டணி வலுப்பெற்றுள்ளதால், உற்சாகத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி, பாஜகவுக்கு 30 தொகுதிகள் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
