சேலம் சீலநாயக்கன்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் உரையாற்றி வரும் விஜய், மற்றவர்கள் தொடங்கிய கட்சியில் இருப்பவர்கள், தன்னை போல் தனியாக நின்று 1% வாக்கு வாங்க முடியுமா என்று விஜய் சவால் விடுத்துள்ளார். தன்னை அனுபவமில்லாதவர் என கூறுவதற்கு பதிலடி கொடுத்த அவர், மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதில் தங்களுக்கு அனுபவமில்லை என்றார். மேலும் கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் முதன்மையான சக்தியாக மாறி, 30%க்கு மேல் மக்கள் ஆதரவை கொண்டிருக்கும் தவெகவுக்கு அனுபவமில்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் சிறுவர்களின் எதிர்காலத்திற்காகவும் தான் கட்சி ஆரம்பித்ததாக கூறிய விஜய், தனக்காக பெற்றோர்களிடம் சிறுவர்கள் வாக்கு சேகரிக்கும் க்யூட் வீடியோக்களை பார்த்ததாக கூறி, அனைவரிடமும் இதையே செய்யும்படி அறிவுறுத்தியுள்ளார். மேலும் யார் மீது, தனிப்பட்ட வன்மமோ, கோபமோ இல்லை எனவும் தேர்தலில் ஜெயித்து மக்களுக்கான நன்றிக்கடனை செலுத்தவே அரசியலுக்கு வந்திருப்பதாகவும் விஜய் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 4.45 ஆண்டுகளுக்கு பிறகு உங்கள் கனவுகளை சொல்லுங்கள் என்று திமுக அரசு ஒவ்வொருவரின் வீட்டுக்கதவுகளை தட்டுகிறது என்று குற்றம்சாட்டிய விஜய், உண்மையான மக்களின் கனவு என்னவென்றால், பாதுகாப்பில்லாத மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றவேண்டும் என்பதுதான் என தெரிவித்தார். எனவே 100% தூய சக்தியான தவெக நேர்மையான ஆட்சியை கொடுக்கும் இந்த விஜய் அந்த ஆட்சியை வழங்குவான் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
