அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி , சி.விஜயபாஸ்கர், எம். ஆர்.விஜயபாஸ்கர், சி.காமராஜ், கே.சி. வீரமணி, கே.பி. அன்பழகன், எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் சேலம் இளங்கோவன், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா ஆகியோருக்கு எதிராக தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது, சாலைகள் அமைப்பதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், அதேபோல், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், எல்இடி வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகவும் லஞ்சு ஒழிப்புத்துறையால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார் .
இதேபோல் அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த தங்கமணி, கே.பி. அன்பழகன், முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், உணவுத் துறை அமைச்சராக இருந்த காமராஜ் , சி.விஜயபாஸ்கர் , கே.சி.வீரமணி உள்ளிட்டோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டுள்ளார்.
அதேபோல் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சத்யா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், சேலம் இளங்கோவன் மீது வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்த வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதாகவும் மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டால் அந்த குற்றம் தொடர்பான வழக்கை தொடர முடியும் என்று சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் குற்றம் செய்தவர்கள் பண மோசடி மற்றும் வருமானத்துறை சொத்து சேர்த்தது, ஊழல் குற்றத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு பல்வேறு புகார்கள் அனுப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே லஞ்ச ஒழிப்புத்துறை சேகரித்துள்ள ஆவணங்கள் அடிப்படையில் இவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர முடியும் என்றும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குகள் உள்ளதால்,
சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளதாக தெரிவித்துள்ளார்
எனவே அவர்கள் மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட வேண்டும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணை வரவுள்ளது.
