சென்னையில் மக்கள் நிறைந்த பிரதான பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் (BSNL) அலுவலகத்தில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் இயங்கி வரும் பி.எஸ்.என்.எல் மத்திய மண்டலம் அலுவலகம் அமையப்பெற்றுள்ள கட்டிடம் மொத்தம் 8 மாடிகளை கொண்டது. இதில் 2-வது மாடியில் இருந்து இன்று (20.12.25) காலை திடீரென கரும்புகை வெளியேறியது. அப்புகை மளமளவென பரவத் தொடங்கி தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ‘மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம்’ என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காலை அலுவலக வேலை நேரத்திற்கு முன்பாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பெரிதாக ஊழியர்கள் யாருமில்லை. அலுவலகத்துக்குள் இருந்த ஒரு நபர் மட்டும் விரைவாக வெளியே அழைத்துவரப்பட்டிருக்கிறார். அதனால் இந்த தீ விபத்தில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை.
இந்த திடீர் தீ விபத்தின் காரணமாக, சர்வர் அறைகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அவசர மருத்துவத்திற்காக ‘108’ சேவை, தமிழ்நாடு காவல்துறையின் காவல் கட்டுப்பாட்டு அறைக்கான ‘100’ தொலைபேசி சேவை, மின் கட்டணம் (EB BILL) செலுத்துவதற்கான சேவை உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவைகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கல்கள் விரைந்து சரிசெய்யப்பட்டு வருவதாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கமளித்து வருகின்றனர்.
