டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, தமிழக முதலமைச்சர் விஜய் வரும் 11-ஆம் தேதி மீண்டும் டெல்லி செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த மாதம் 27-ஆம் தேதி விஜய் முதன்முறையாக டெல்லிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, தமிழகத்தின் முக்கியத் தேவைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை அளித்தார்.
குறிப்பாக, கர்நாடக அரசு திட்டமிட்டுள்ள மேகதாது அணைத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும், தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதே நாளில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்துப் பேசினார்.
இந்த டெல்லி பயணத்தின் போது, கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை முதலமைச்சர் விஜய் சந்தித்துப் பேசுவார் என்று அரசியல் வட்டாரங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கால நேரக் குறைவு காரணமாக அந்தச் சந்திப்பு நடைபெறாமலேயே அவர் சென்னை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதிப் பகிர்வு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து ஆலோசிப்பதற்காக, பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டம் வரும் 11-ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இந்த முக்கியக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் டெல்லி செல்லவுள்ளார். இந்த இரண்டாவது பயணத்தின் போது, கடந்த முறை விடுபட்ட காங்கிரஸ் தலைவர்களுடனான சந்திப்பு நிகழ அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
