உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழ்நாட்டை சேந்த மோகனா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனா உட்பட 5 பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே வழக்கறிஞராக இருந்து நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள 2வது பெண்மணி மற்றும் முதல் தமிழ்நாட்டு பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் மோகனா.
இவர் 2031-ம் ஆண்டு ஜூன் வரை 5 ஆண்டுகள் அவர் பதவியில் இருப்பார். அவருடன் இன்று நியமிக்கப்பட்ட மற்ற நால்வர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக இருந்தவர்கள். பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய ஷீல் நாகு, மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஸ்ரீ சந்திரசேகர், மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் சச்தேவா, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த அருண் பல்லி ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் நியமனம் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள மோகனாவுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், ”உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வெங்கிட சுப்ரமணி மோகனா நியனம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
உச்சநீதிமன்ற வரலாற்றில், மூத்த வழக்கறிஞராக பணியாற்றி நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் 2வது பெண் என்ற பெருமையையும், தமிழ்நாட்டை சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். மோகனாவின் நியமனம் பெண் கல்வி முன்னேற்றத்திற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் உந்து சக்தியாக இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.
இதேப் போல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள தமிழ்நாட்டின் பெருமைமிகு வழக்கறிஞர் திருமதி. வி. மோகனா அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய நீதித்துறையின் உச்சபட்ச அங்கீகாரத்தைப் பெற தங்களின் இந்தப் பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கது.
வழக்கறிஞர் பணியில் இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்படும் இரண்டாவது பெண் வழக்கறிஞர் என்ற பெருமையையும், தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் தருணமாகும். தங்களின் கடின உழைப்பாலும், சட்ட நுணுக்கங்களாலும் இந்த உயரிய நிலையை எட்டியிருப்பது சட்டத்துறையில் தடம் பதிக்க விரும்பும் ஆயிரக்கணக்கான இளம்பெண்களுக்கு உங்களின் இந்த வெற்றி ஒரு மிகப்பெரிய உந்துசக்தியாகவும், வழிகாட்டியாகவும் அமையும்.
தங்களின் பதவிக்காலம் சிறக்கட்டும். தங்களின் சட்ட அறிவும், அனுபவமும் இந்திய நீதித்துறைக்கு மேலும் வளம் சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும்” எனத் தெரிவித்துள்ளார்.
