தமிழக உட்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட உள்ளது. அதனடிப்படையில் தேதி அறிவிக்கப்பட்ட உடனடியாக மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வரும். தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய இந்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிகள் இதோ:
புதிய திட்டங்களுக்குத் தடை: தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, ஆளுங்கட்சி எந்தவொரு புதிய நலத்திட்டங்களையோ, சாலைப் பணிகள் அல்லது கட்டிடத் திறப்பு விழாக்கள் போன்ற புதிய அறிவிப்புகளையோ வெளியிட முடியாது. ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் பணிகள் தொடரலாம், ஆனால் வாக்காளர்களை கவரும் வகையில் புதிய வாக்குறுதிகளை அளிக்கக் கூடாது.
பணப் பரிமாற்றம் மற்றும் சோதனை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பறக்கும் படைகள் அமைக்கப்படும். ஆவணங்களின்றி ரூ. 50,000-க்கும் அதிகமான ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்லக் கூடாது. உரிய ஆவணங்கள் இல்லையெனில் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்படும். இதேபோல், பரிசுப் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் கொண்டு செல்லப்படுவதும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.
பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள்: அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் அல்லது பேரணி நடத்த அந்தந்தப் பகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அல்லது காவல்துறையிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும்.
அரசு விழாக்கள் மற்றும் பணியிட மாற்றம் : அரசு செலவில் அரசு விழாக்கள் நடத்தவோ, சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தவோ அனுமதி கிடையாது. விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன், தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்யக் கூடாது. தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் ஆணையத்தின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் வருவார்கள்.
தனிநபர் விமர்சனங்களுக்குத் தடை: அரசியல் கட்சிகள் பிரசாரத்தின் போது தங்கள் கொள்கைகள், கடந்த கால சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து மட்டுமே பேச வேண்டும். மற்ற கட்சி வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது குடும்பம் குறித்து விமர்சிக்கக் கூடாது. கண்ணியமான முறையில் பிரசாரம் அமைய வேண்டும் என்பது கட்டாயம்.
பொது இடங்களுக்கு கட்டுப்பாடு: தேர்தல் பிரசாரத்திற்காகப் பொது மைதானங்கள், ஹெலிபேடுகள் மற்றும் பொது இடங்களைப் பயன்படுத்துவதில் எந்தவொரு கட்சிக்கும் முன்னுரிமை அளிக்கப்பட மாட்டாது. முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், கட்சிப் பாகுபாடின்றி அனைத்துக் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
