திருநெல்வேலி பழைய பேருந்து நிலையத்தில் இன்று மதியம் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக கணவனே மனைவியை அறிவாளால் வெட்டிக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர்-பேச்சியம்மாள்(26) தம்பதியினரிடையே நீண்ட நாட்களாகக் குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், தனக்கு எதிராக மனைவி பேசுவதை  ஏற்றுக்கொள்ள முடியாமலும், அதை சமாளிக்கவும் சுதாகர் இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில், இன்று காலையில் பாலாமடையில் இருந்து பேருந்து மூலம் சுதாகர் மற்றும் பேச்சியம்மாள் இருவரும் திருநெல்வேலி சந்திப்பு பழைய பேருந்து நிலையம் பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது பேருந்தில் இருந்து இறங்கியதும் சுதாகருக்கும், பேச்சியம்மாளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சுதாகர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பேச்சியம்மாளை வெட்ட முயன்றார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த  பேச்சியம்மாள் கணவரிடம் இருந்து தப்பிக்க முயற்சித்த நிலையில் பேருந்து நிலையம் உள்ளே துரத்திச் சென்று சுதாகர் பேச்சியம்மாளை சரமாரியாக வெட்டினார். இதில் இரத்த வெள்ளத்தில் அவர் அங்கேயே உயிரிழந்தார்.

விடுமுறை தினமான இன்று பேருந்து நிலையத்தில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியாக அமைந்தது. உடனடியாக அங்கிருந்து தப்பித்து ஓடிய சுதாகர் அருகிலிருக்கும் திருநெல்வேலி ரயில்வே தண்டவாளத்தில் அரிவாளை வீசி விட்டு நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் மனைவியை கொன்றதாக சரணடைந்தார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பேச்சியம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுதாகரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மனைவி பேச்சியம்மாள் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் கொலை செய்ததாக தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version