சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவோடு வசூல் வேட்டை நடத்தி வரும் திரைப்படம் ‘கருப்பு’. நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் ஒருபுறம் கொண்டாடப்பட்டாலும், மறுபுறம் அதில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட காட்சி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
இசைஞானி இளையராஜாவின் காப்புரிமை விவகாரத்தை மறைமுகமாக நையாண்டி செய்யும் வகையில் அந்த காட்சி அமைக்கப்பட்டிருப்பதாக நெட்டிசன்களும் இளையராஜாவின் ரசிகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில், “இளையராஜாவின் பாடலைப் பயன்படுத்தியதற்காக அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்” என்ற தொனியில் வசனம் இடம்பெற்றிருந்தது.
பல ஆண்டுகளாக தனது இசைக்கான காப்புரிமைக்காக சட்டப் போராட்டம் நடத்தி வரும் ஒரு ஜாம்பவானை, இப்படித் தரம் தாழ்த்திச் சித்தரிப்பது முறையல்ல என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆர்.ஜே. பாலாஜிக்கும் படக்குழுவிற்கும் எதிராக கண்டன குரல்களை எழுப்பினர்.
சர்ச்சை விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, ‘கருப்பு’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் (Dream Warrior Pictures) உடனடியாக ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அந்த அறிக்கையில், “கருப்பு திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சி என்பது வெறும் செய்தியை கடத்தும் நோக்கத்திற்காக மட்டுமே இடம் பெற்ற தற்செயலான ஒன்று. இசைஞானி இளையராஜா ஐயாவை காயப்படுத்தவோ அல்லது களங்கப்படுத்தவோ படக்குழுவிற்கு எந்த எண்ணமும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “50 ஆண்டுகளுக்கும் மேலாக இசை உலகை ஆட்சி செய்து வரும் இசை அரசரான இளையராஜாவுக்கு எங்களிடம் மிகுந்த மரியாதை உள்ளது. உள்நோக்கம் இல்லாமல் வைக்கப்பட்ட அந்த காட்சியால் இளையராஜா அல்லது அவரது ரசிகர்கள் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக எங்களின் தாழ்மையான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றும் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
