செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் மற்றும் ஸ்கைவாக் பணிகள் ஜனவரி 2026-ல் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்கைவாக் பணிகள் முழுமையடையாததால் பிப்ரவரி 2026-ல் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் இதுவரையில் 50சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்து உள்ளது.
ஜி.எஸ்.டி சாலையைக் கடக்காமல் பயணிகள் பாதுகாப்பாக பேருந்து நிலையத்தை அடைய ஸ்கைவாக் அவசியம். ரயில் நிலையத்தையும் பேருந்து நிலையத்தையும் ஜி.எஸ்.டி சாலை வழியாக இணைக்கும் ஸ்கைவாக் எனப்படும் நடைமேம்பாலப் பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை.
இந்த புதிய ரயில் நிலையத்தில் இருந்து ஸ்கைவாக் வழியாகப் பயணிகள் நேரடியாகப் பேருந்து நிலையத்தின் உள்ளே செல்ல முடியும். விரைவில் இந்தப் பணிகள் முடிந்தால், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு ஒரு பெரிய தீர்வாக இது அமையும்.
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு செல்லும் உயர்மட்ட ஆகாய நடைமேடை ரூ.79 கோடி மதிப்பீட்டில் 200 மீட்டர் நீளத்திற்கு மூன்று கட்டங்களாக அமைக்கப்பட உள்ளது. இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து நேராக ரயில் நிலையத்திற்கும், சென்னை, செங்கல்பட்டு போன்ற பகுதிகளிலிருந்தும் வரும் பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கும் நேரடியாகச் செல்லலாம்.
ஆனால் தற்போது வரை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. பயணிகள் மிகுந்த அச்சத்துடன் ஜி.எஸ்.டி சாலையை கடந்து பேருந்து நிலையத்திற்க்கு செல்கின்றனர். இதனால் விரைந்து பணிகளை முடிக்கவெண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்
