தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், அரசின் திட்டப்பணிகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில், இன்று சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றுகிறார்.
மாவட்ட கழக செயலாளர் மற்றும் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இது குறித்து தெரிவிக்கையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று, மக்களின் குறைகளை கேட்டறிந்து ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் இன்று அவரது சுற்றுப்பயணம் நடைபெறுகிறது.
மதுரையில் இருந்து கார் மூலம் சிவகங்கை வரும் துணை முதலமைச்சருக்கு, காலை 9:30 மணியளவில் திருப்புவனத்தில் மாவட்ட கழகம் சார்பில், அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
தொடர்ந்து, காலை 10 மணியளவில் காணூரில் 40 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் தடுப்பணை திட்டப்பணியை பார்வையிடுகிறார். பின்னர், 10:30 மணியளவில் சிவகங்கை நகர் மன்ற தலைவர் மற்றும் கட்சியின் மூத்த முன்னோடி சொ.லெ.சாத்தையாவை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரிக்கிறார். காலை 11 மணியளவில் சிவகங்கை தாலுகா, சோழபுரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டப்பணிகளை பார்வையிடுகிறார்.
பகல் 11:30 மணியளவில், மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜீத் தலைமையில், ஆட்சியர் அலுவலகத்தில் அரசின் திட்டப்பணிகள், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். பகல் 12 மணியளவில், சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள திடலில், நிறைவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், பல்வேறு அரசு துறைகளின் சார்பில் ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றுகிறார்.
தொடர்ந்து, சிவகங்கை அரசு வேலுநாச்சியார் மாளிகையில் மதிய உணவு அருந்துகிறார். மாலை 4 மணியளவில் திருப்பத்தூரில் உள்ள ராஜேஸ்வரி மகாலில் கட்சியின் அனைத்து நிர்வாகிகள், துணை அமைப்பாளர்களை சந்திக்கிறார். பின்னர், ஆர்.கே.மகாலில் மாவட்ட இளைஞரணி, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை சந்திக்கிறார்.
மாலை 6:45 மணியளவில் மதுரைக்கு புறப்பட்டு செல்லும் துணை முதலமைச்சர், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.