விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்துள்ள விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எச். வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்தப் படம், தணிக்கை சிக்கல்கள் காரணமாகப் பொங்கல் வெளியீட்டிலிருந்து தள்ளிப்போனது. தற்போது மறுதணிக்கைக்காகக் காத்திருக்கும் நிலையில், படத்தின் முக்கிய அறிமுகக் காட்சிகள் மற்றும் ‘ஒரு பேரே வரலாறு’ என்ற பாடல் காட்சிகள் உள்ளிட்ட 5 நிமிட வீடியோக்கள் சட்டவிரோதமாக இணையத்தில் பரவியுள்ளன. இது படக்குழுவினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தச் செயலுக்கு எதிராகத் தயாரிப்பு நிறுவனம் சைபர் கிரைமில் அதிரடியாகப் புகார் அளித்துள்ளது. படத்தின் வீடியோக்களைப் பகிர்ந்தவர்கள் மற்றும் பதிவிறக்கம் செய்தவர்கள் என இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவர் மீதும் தனித்தனியாகக் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தவெக தலைவர் விஜய், தனது படத்திற்குத் திட்டமிட்டே முட்டுக்கட்டை போடப்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்த சூழலில், இந்தக் கசிவு விவகாரம் அரசியல் மற்றும் திரைத்துறை என இரு தரப்பிலும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

இதற்கிடையில், திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் (X) தளத்தில், திரையுலகின் கடின உழைப்பை மதிக்க வேண்டும் என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். “ஒரு திரைப்படம் உருவாவதற்குப் பின்னால் பலரின் ரத்தமும் வியர்வையும் உள்ளது; தயவுசெய்து திருட்டுத்தனமாகப் பார்ப்பதைத் தவிர்க்கவும்” என்று பதிவிட்டுள்ள அவர், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஏப்ரல் 30 வரை படம் வெளியாக வாய்ப்பில்லை எனக் கூறப்படும் நிலையில், திரையுலகினரின் இந்த ஒருமித்த குரல் படக்குழுவினருக்குப் பலத்தை அளித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version