திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், உணவகத்தில் வேலை பார்த்து வந்த பெண் தொழிலாளியை தவெக நிர்வாகியின் மகன் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் புதிய புகார் எழுந்துள்ளது.
தாராபுரம் அருகேயுள்ள குள்ள காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த லதா (40). கணவனை இழந்த பெண், தனது குடும்பச் சூழ்நிலை காரணமாக சர்ச் சாலையில் இயங்கி வரும் தனியார் உணவகத்தில் சமையல் உதவியாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்த உணவகத்தை தமிழக வெற்றி கழகத்தின் தொகுதி பொறுப்பாளர் கராத்தே கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன் ஹரிஹரன் ஆகியோர் நடத்தி வருவதாகத் தெரிகிறது.
சமீபத்தில், உணவகத்தில் பணி நிமித்தமாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ஹரிஹரன் அந்தப் பெண்ணை அவதூறாகப் பேசி, காதின் அருகே பலமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த லதாவை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்த வாடிக்கையாளர்களும், லதாவின் உறவினர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் போலீசாரிடம் முழுமையாக ஒப்படைக்கப்படவில்லை என்றும், ஆதாரங்களை மறைப்பதற்காக அவை அழிக்கப்பட்டிருப்பதாகவும் லதாவின் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தாராபுரம் காவல் துறையினர் லதா மற்றும் ஹரிஹரன் ஆகிய இருதரப்பிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
