நெல்லை டவுன் அருகே இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை டவுன் பாறையடி மந்திரமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் குருநாதன். இவரது மகன் ஆவுடையப்பன் (38). பிளம்பராக வேலை பார்த்து வந்த இவருக்குத் திருமணமாகி, மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். சங்கரன்கோவில் – நெல்லை டவுன் மெயின் ரோடு பகுதியில் உள்ள கோட்டையடி சுடுகாடு அருகே ஆவுடையப்பன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென ஆவுடையப்பனை வழிமறித்து, சரமாரியாக வெட்டினர். இதில் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இக்கொலை குறித்துத் தகவல் அறிந்த நெல்லை டவுன் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால், அதற்குள் அங்கு திரண்ட ஆவுடையப்பனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், போலீசாரை உடலை எடுக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.
“கொலையாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்யும் வரை உடலை எடுக்க அனுமதிக்க மாட்டோம்” என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் அன்சூர் நாகர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட இறந்தவரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.
உயரதிகாரியின் இந்த உறுதிமொழிக்குப் பிறகு, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதையடுத்து, ஆவுடையப்பனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேதப் பரிசோதனைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. முன்பகை காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் நெல்லை டவுன் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
