திமுக அரசை கண்டித்து விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களைத் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் விழுப்புரத்தில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் தலைமை தாங்கினார். இதில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் சி.வி.சண்முகம், “தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதால் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டன. இது குறித்து விவாதிக்கக் கூடாது என உள்துறைச் செயலாளர் கூறுவது கண்டிக்கத்தக்கது. இவரைப் போன்ற அதிகாரிகளை வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கை எப்படிக் காப்பாற்ற முடியும்? ஒருதலைப்பட்சமாகச் செயல்படும் அரசு அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மக்களின் வளங்களைக் கொள்ளையடித்துள்ள இந்த திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் இறுதி வாய்ப்பு இது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உட்பட இதற்குப் பொறுப்பான அனைவரும் புழல் சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றார்.
மேலும், “ அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். இவர் அதைவிட ஒரு படி மேலே போய் உங்கள் கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன் என்கிறார். ஆமாம் நயன்தாரா வேண்டும். முதல்வர் நிறைவேற்றுவாரா? நயன்தாராவை திருமணம் செய்து வைக்க சொல்லி கேட்பார்கள் முதல்வர் நிறைவேற்றுவாரா? என்று கேள்வி எழுப்பிய அவர், தற்போது ஆட்சி போன பிறகு சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன் என்று கூறுகிறார், ஆனால் ஐந்து ஆண்டுகள் என்ன செய்து கொண்டிருந்தார் என்று பேசினார். நடிகையை குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

