கோவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.பி. வேலுமணியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு உறுதியளித்துள்ள நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காகப் பொய் பரப்புரை செய்வதாகக் குற்றம் சாட்டினார். தொகுதி மறுசீரமைப்பு மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் அமையும் என்றும், இதன் மூலம் பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய இடஒதுக்கீட்டைத் தடுக்க திமுக முயற்சிப்பதாகவும் அவர் சாடினார்.

தமிழக அமைச்சர்களையும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் கடுமையாகத் தாக்கிப் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் 39 எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் தமிழக நலனுக்காக எதையும் சாதிக்காமல் ‘பெஞ்ச்’ தேய்த்துக் கொண்டிருப்பதாக விமர்சித்தார்.

செந்தில் பாலாஜி குறித்துப் பேசுகையில், அவர் வைரஸை விட மோசமானவர் என்றும், கரூரில் ஊழல் செய்துவிட்டு தற்போது கோவையை நோக்கி வந்துள்ளதாகவும் விமர்சித்தார். மேலும், திமுக ஆட்சியில் அதிமுகவினர் மீது பொய் வழக்குப் போட்ட அதிகாரிகள் மீது, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், “அன்று பார்த்த பழனிசாமி வேறு, இனி வரப்போகும் பழனிசாமி வேறு” என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளைப் பட்டியலிட்ட அவர், தங்கள் ஆட்சி அமைந்ததும் சிறு, குறு தொழிலாளர்களின் சிக்கல்கள் தீர்க்கப்படும் என உறுதி அளித்தார். குறிப்பாக, பெண்களுக்கு மாதம் ₹2,000 உதவித்தொகை, ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசம் மற்றும் நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கும் இலவசப் பயணம் போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்தப் போவதாக அறிவித்தார். “ஆட்சி மாறும்போது காட்சி மாறும்” என்று முழங்கிய அவர், தமிழக மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான் என்று கூறி வாக்குகளைச் சேகரித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version