சில தனிநபர்கள் ஜல்லிக்கட்டை நடத்தியதால் தான் பிரச்சனைகள் எந்ததாக குறிப்பிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே ஏற்று நடத்தவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகம் நடத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் மேட்ச் கிடையாது, சில தனிநபர்கள் ஜல்லிக்கட்டை நடத்தியதால் தான் பிரச்சனைகள் எழுந்தன எனவே, ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்தவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், ஜனவரி 15-ஆம் தேதி அவனியாபுரத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை, கிராம கமிட்டியே நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்கள் உலகப் புகழ்பெற்றவை என்பதால், இவ்விழாக்களை தனிநபர்கள் நடத்துவது ஏற்றதல்ல என்றும், அரசு நிர்வாகமே இப்போட்டிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தி உத்தரவு பிறப்பித்தனர்.

அதாவது, கடந்த 2017-ம் ஆண்டு உச்சநீதிமன்ற அனுமதிக்குப் பிறகு, 2018-ம் ஆண்டு தனிநபர் சங்கம் ஒன்று ஜல்லிக்கட்டு விழாவை நடத்தியது. இதற்கு எதிராக முன்பே உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு விழாவை மாவட்ட நிர்வாகமே நடத்த வேண்டும் என்றும், 16 பேர் கொண்ட ஆலோசனை குழுவுடன் போட்டி நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டதாக மனுவில் கூறப்பட்டது. தற்போது வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு விழாவை, அனைத்து சமுதாய பிரதிநிதிகள் அடங்கிய கிராம பொது கமிட்டிக்கு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version