பதவிக்காலம் நிறைவுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாராட்டியும், புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள எம்.பி.க்களை வாழ்த்தியும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க.வின் சண்முகம் மற்றும் எம்.எம்.அப்துல்லா ஆகியோரின் நாடாளுமன்றப் பணிகளைப் பாராட்டியுள்ளார். மேலும், புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள வழக்கறிஞர் பி.வில்சன், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

வைகோவின் “சங்கநாத” குரலுக்கு முதல்வர் நெகிழ்ச்சி:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் நாடாளுமன்றப் பணிகளைப் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின், “நாடாளுமன்ற வரலாற்றில் அண்ணன் திரு.வைகோ அவர்கள் நான்கு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றித் தனக்குக் கிடைத்த நீண்ட நெடிய அனுபவத்தின் வாயிலாக, தமிழர் நலனையும் தமிழ்நாட்டின் உரிமைகளையும் சங்கநாதமென முழங்கியவர்” என்று குறிப்பிட்டார். 1978-ல் கலைஞர் அவர்களால் முதன்முறையாக மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்ட வைகோவின் குரல், 47 ஆண்டுகளுக்குப் பிறகும், 81-ஆவது வயதிலும் அதே வீரியத்துடன் ஒலித்ததைக் கேட்டு தான் மெய்சிலிர்த்ததாக ஸ்டாலின் தெரிவித்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினராக தொடர்ந்து மூன்று முறை பணியாற்றிய காலத்தில், ‘நாடாளுமன்றப் புலி’ என்கிற அளவிற்கு அவரது குரல் ஒலித்ததுடன், கழக மேடைகளிலும் சிங்கமென கர்ஜித்ததை முதல்வர் நினைவு கூர்ந்தார். நேற்று (ஜூலை 24) மாநிலங்களவையில் தனக்கான பிரியாவிடை நிகழ்வில் வைகோ, கலைஞர், முரசொலி மாறன் ஆகியோரை நினைவுபடுத்தி தனக்கும் நன்றி தெரிவித்ததை மருத்துவமனையிலிருந்து தொலைக்காட்சி வாயிலாகப் பார்த்ததாகவும், வைகோவின் தமிழர்களின் உரிமைக்கான செயல்பாடுகள் மக்கள் மன்றத்தில் என்றும் தொடர்ந்திட வேண்டும் என்றும் வாழ்த்தி மகிழ்வதாக ஸ்டாலின் கூறினார்.

தொழிலாளர் நலனில் சண்முகத்தின் அக்கறை:

தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி நிறைவுசெய்த சண்முகம் குறித்துப் பேசிய முதல்வர், “கருப்பு-சிவப்பு கழகத்தில் அண்ணன் சண்முகம் அவர்கள் தொழிலாளர்களின் சிவப்புச் சிந்தனை சார்ந்த உரிமைக் குரலாக இருப்பவர்” என்று பாராட்டினார். 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தைக் கட்டமைத்து, ஒவ்வொரு மே தினத்திலும் தங்கள் சங்கத்தினருடன் தன்னையும் சிவப்புச் சட்டையில் வீரவணக்கம் செலுத்த வைக்கும் வழக்கத்தைக் கொண்டவர் சண்முகம் என்றும், ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் அவையில் தொழிற்சங்கப் பிரதிநிதியாக முழங்கிய அவரது குரல், இந்திய நாடாளுமன்றத்திலும் ஒலித்திட வேண்டும் என்பதாலேயே அவர் மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் சண்முகம் ஆற்றிய பணிகளுக்குக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது தொழிற்சங்கப் பணிகள் தொய்வின்றித் தொடர்ந்திட வாழ்த்துவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இளங்குருத்து எம்.எம். அப்துல்லாவின் சிறப்புப் பணி:

மாநிலங்களவையில் தி.மு.க.வின் இளங்குருத்தாக அனுப்பி வைக்கப்பட்ட எம்.எம்.அப்துல்லா குறித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை உணர்ந்து, மாநிலங்களவையில் மக்கள் சேவகராகச் சிறப்பாகப் பணியாற்றி, மாற்றுக்கட்சியினரும் பாராட்டும் வகையில் நடந்துகொண்டதை அறிந்து கழகத்தின் தலைவர் என்ற முறையில் பெருமை கொள்கிறேன்” என்று தெரிவித்தார். வருகைப் பதிவு, எழுப்பிய கேள்விகள், பெற்ற பதில்கள், அதன் வழியாக நிறைவேறிய திட்டங்கள் என அனைத்திலும் சிறப்பாகச் செயல்பட்ட அப்துல்லாவின் பணிகள், குறுகிய காலத்திலேயே அவரை முழுமையான ‘பார்லிமெண்ட்டேரியன்’ என அடையாளம் காட்டியுள்ளதாக முதல்வர் குறிப்பிட்டார். நாட்டுப்பற்றையும் மதநல்லிணக்கத்தையும் மாநிலங்களவை விவாதங்களில் அழுத்தமாகப் பதிவு செய்த அப்துல்லா, தனது பதவிப் பொறுப்பு நிறைவடையும் நாளிலும் மதநல்லிணக்க அடையாளமான கோரிக்கையை முன்வைத்து, கழகத்தின் வார்ப்பு என்பதை மெய்ப்பித்திருப்பதாக ஸ்டாலின் பாராட்டினார். சமூகநீதிப் பாதையில் தன் பயணம் தொடரும் என்று அவர் மாநிலங்களவையில் குறிப்பிட்டதுபோல, மக்கள் மன்றத்தில் கழகத்தின் சார்பில் அவருக்கான பணிகள் காத்திருக்கின்றன எனக் கூறி வாழ்த்துவதாகவும் முதல்வர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

புதிய எம்.பி.க்களுக்கு வாழ்த்து:

இதேபோல், சமூகநீதி காக்க அயராது பணியாற்றும் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் மீண்டும் தன்னுடைய அழுத்தமான வாதங்களை வைத்து உரிமைக்குரல் எழுப்பவுள்ளார் என்று குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், அவருக்கும், மாநிலங்களவையில் புதிதாகப் பொறுப்பேற்று தங்களுடைய கருத்துகளைப் பதிவுசெய்யவுள்ள நண்பர் திரு. கமல்ஹாசன், திரு. எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோருக்கும் அவர்களது பணி சிறக்க தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version